15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த மாதத்தில், வடகொரியா நடத்திய அணுகுண்டுச் சோதனை காரணமாக, சுரங்கம் இடிந்துவிழுந்ததில் 200 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானிய செய்தி நிறுவனம் ‘அஷாகி’ வெளியிட்டுள்ள செய்தியில், 18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (03.09.2017)வடகொரியா 6.3 ரிக்டர் அளவிலும் அதைத் தொடர்ந்து 4.3 ரிக்டர் அளவிலும் பூகம்பத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகொண்ட இரு அணுகுண்டுகளைச் சோதனை செய்தது. அவை, ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைக் காட்டிலும் 8 மடங்கு சக்தி வாய்ந்தவை. 120 கிலோ டன் எடைகொண்டவை. இதன் காரணமாக, புங்கயேர் மலைப் பகுதியில் அணுகுண்டு சோதனை நடத்தும் சுரங்கம் இடிந்துவிழுந்ததில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தரைக்கு அடியில் நடத்தப்படும் அணுகுண்டு சோதனைகள், மலைப் பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்தும் என வடகொரிய அதிபர் கிம்மை புவியியல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதையும் மீறி அணுகுண்டுச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது, புகுஷிமாவில் ஏற்பட்டதுபோல கதிர்வீச்சு வெளியாகியுள்ளது என்று கூறியுள்ளது. மலைக்கு அடியில்தான் வடகொரியா தொடர்ச்சியாக அணுகுண்டுச் சோதனைகளை நடத்திவருகிறது. இதுவரை 6வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன விஞ்ஞானி வாங் நயான் கூறுகையில், ‘100 கிலோ டன் என்பது அதிக சக்திகொண்டது. வடகொரியாவின் அணுகுண்டுச் சோதனையால், அந்த நாட்டுக்கு மட்டுமல்லாமல் அருகிலுள்ள நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். கதிர்வீச்சு ஏற்பட்டால், சீனாவும் பாதிப்புக்குள்ளாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



