15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீன மிடுக்குப்பேசி நிறுவனமான சியோமி கடந்த மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மிடுக்;குப்பேசிகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சீனாவின் வெய்போ தளத்தில் புதிய சாதனையை லெய் ஜூன் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவுடன் சியோமி எம்ஐ5எக்ஸ் மிடுக்குப்பேசியின் விளம்பரக்காணொளி புகைப்படமும் பதிவிடப்பட்டுள்ளது. இதே தகவலை சியோமி இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் தனது கீச்சுவில் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மிடுக்குப்பேசிகளை விற்பனை செய்திருக்கிறோம் என தெரிவித்திருந்தார். முன்னதாக திபாவளி விழாக் காலத்தில் மட்டும் சியோமி நிறுவனம் 40 லட்சத்திற்கும் அதிகமான மிடுக்குப்பேசிகளை ஒரே மாதத்தில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களை தொடர்ந்து இந்தியாவில் முன்னணி மிடுக்குப்பேசி விற்பனை தளமாக சியோமியின் மை.காம் இருந்தது. இந்தியாவில் ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5116ல் (2014-ஜூன்) களமிறங்கிய சியோமி நிறுவனம் ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் விவோ போன்ற சீன மிடுக்குப்பேசி நிறுவனங்கள் மட்டுமின்றி ஆப்பிள், சாம்சங் மற்றும் சோனி போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் முதல் 5 இடங்களில் ஏற்கனவே இடம்பிடித்துள்ள சியோமி கூகுளுடன் இணைந்து ஆண்ட்ராய்டு ஒன் மிடுக்குப்பேசிகளை வெளியிட இருக்கிறது. மலிவு விலை மிடுக்குப்பேசிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது சியோமியின் விற்பனை அதிகரிக்க காரணமாக அமைகிறது. முன்னதாக அந்நிறுவனம் 9 கோடி மிடுக்குப்பேசிகளை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய மிடுக்குப்பேசி சந்தையில் சியோமி 22 விழுக்காடு பங்குகளைப் பெற்றுள்ளது. இதனால் சாம்சங் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்தியாவில் இரண்டாவது இடத்தில் சியோமி உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



