Show all

தரமற்றவைகளாம்- ஐரோப்பிய நாடுகள் புலம்பல்! கொரோனா நுண்ணுயிரி பரிசோதனைக்கு சீனா தயாரித்து விற்றுவரும் கருவிகள்

நடுநிலையாளர்களிடம்- கொரோனாவை வைத்து சீனா போங்காட்டம் முன்னெடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா நுண்ணுயிரி பரிசோதனைக்கு சீனா தயாரித்து விற்றுவரும் கருவிகள் தரமற்றவைகளாம்.

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் கொரோனா தொற்று வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீனாவும், சீனாவின் பேரறிமுக மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களும் மேற்கத்திய நாடுகளில் தீவிர கருத்துப்பரப்புதல் மேற்கொண்டு வருகின்றன. 

கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் கருவிகள் மற்றும் தரமான முகக் கவசங்கள் தங்களிடம் விற்பனைக்குள்ளதாக அறிவித்தன சீன நிறுவனங்கள்.

இதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை கருவிகளையும், முகக் கவசங்களையும் பல லட்சக்கணக்கில் ஐக்கிய நாடுகள், ஸ்பெயின், செக் குடியரசு, சுலோவாக்கியா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் சீனாவிடமிருந்து வாங்கின. தற்போது இந்த கருவிகள் அனைத்துமே தரமற்றவை என இறக்குமதி செய்த நாடுகள் தெரிவித்துள்ளன.

ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையின் அவசர தேவையாக 6லட்சத்து 40 ஆயிரம் பரிசோதனைக் கருவிகளை வாங்க கேட்பு வழங்கப்பட்டது. ஸ்பெயின் நலங்;குப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்:-

சீனாவின் பேரறிமுக உயரி தொழில்நுட்ப நிறுவனமொன்றிடம் இருந்து முதல் கட்டமாக பெறப்பட்டுள்ள கொரோனா தொற்று பரிசோதனை கருவிகள் 30 விழுக்காடே முடிவைத் தந்தன. ஆனால் 80விழுக்காடு வரை துல்லிய முடிவுகள் கிடைத்தால் மட்டுமே கொரோனா தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்த இயலும் என்று தெரிவித்துள்ளனர்.

செக் குடியரசு வைத்திய அதிகாரிகள் பேசும்போது:- அன்றாடம் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்கிறோம். என்றாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 நாட்கள் ஆனவர்களையே இதில் கண்டறிய முடிகிறது என்றார்.

சுலோவாக்கியா பிரதமர் இகோர் மோடோவிச்:- உள்ளூர் இடைத்தரகர் ஒருவர் மூலம் சீனாவிலிருந்து 12 லட்சம் பரிசோதனைக் கருவிகளை வாங்கினோம். ஒன்றிலுமே உருப்படியான முடிவு கிடைக்கவில்லை. இவற்றையெல்லாம் கொண்டுபோய் ஆற்றில்தான் வீசவேண்டும் என்று ஆவேசப்பட்டார்.

இங்கிலாந்து பொது நலங்கு பிரிவு உயரதிகாரி ரொபர்ட் பெஸ்டோன்:- சீனா கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனை கருவிகளின் முடிவுகள் முற்றிலும் தெளிவற்று காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் எளிய இறக்குமதி கொள்கைகளை பயன்படுத்தி, கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து மருத்துவ கருவிகள் தயாரிக்கும் சீன நிறுவனங்கள் பெருமளவில் விளையாடி விட்டன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் தங்கள் நாட்டு மருத்துவ கருவிகள் பற்றி ஐரோப்பிய நாடுகள் குற்றஞ் சாட்டுவதை சீனா மறுத்துள்ளது. இதுபற்றி சுலோவாக்கியா நாட்டிற்கான சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:-

சுலோவாக்கியாவில் சீன நிறுவனங்களின் பரிசோதனைக் கருவிகளை யாருக்கும் சரியாக கையாளத் தெரியவில்லை. எனவேதான் அவர்களுக்கு துல்லிய முடிவுகள் கிடைக்கவில்லை என்று மறுத்தார்.

“ஏற்றுமதி கொள்கையில் நாங்கள் ஒருபோதும் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதில்லை” எனவும் சீனா அரசாங்கம் கூறுகிறது. அதேநேரம், ‘இனிமேல் தங்கள் நாட்டு மருத்துவ நிறுவனங்கள் மருத்துவ கருவிகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக தக்க தகுதிச் சான்றிதழ்களை பெறவேண்டும்’ என்ற புதிய உத்தரவையும் சீன அரசாங்கம் பிறப்பித்துள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.