Show all

மகிழ்ச்சியான செய்தி- இதோ கொரோனாவற்கு எதிராக வெளிவரும் இன்னுமொரு தடுப்பூசி! கண்டுபிடித்துள்ளது இரசியா

இரசியா, கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை செலுத்தி சோதிக்க 50 இராணுவ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இரசியாவிலும் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக வளர்ந்தே வருகிறது. ஆனால் அதன் தாக்கம் முதல் 3 மாதங்களில் தீவிரமாக இல்லை. கடந்த மாதத்தில்தான் கொரோனா அங்கு காட்டுத்தீ போல பரவியது. அன்றாடம் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது.

இப்போது அந்த நாடு கொரோனா பாதிப்பில் உலகின் மோசமான நாடுகள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருக்கிறது. அங்கு 4 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. உயிர்ப்பலியில் இந்தியாவுக்கு அடுத்த நிலையில் இரசியா உள்ளது. இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி 5,610 பேர் பலி என்கிறபோது அது ரஷியாவில் 5,031 ஆக இருக்கிறது.

கொரோனா நுண்ணுயிரியை ஒழித்துக்கட்ட தடுப்பூசி கண்டுபிடித்தாக  வேண்டியது முதன்மைக் கட்டாயம் ஆகும். அதற்கான ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடும் போட்டியும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் இரசியாவில் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தடுப்பூசி தொடக்கக் கட்ட சோதனைகளை முடித்துக்கொண்டுள்ளது. அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற கட்டத்தை அடைந்துள்ளது.

அந்த வகையில் இரசிய இராணுவத்தில் உள்ள 50 அதிகாரிகள் (தன்னார்வலர்கள்) இந்த பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி இரசிய இராணுவ அமைச்சகம் கூறுகையில், இரசியாவில் உருவாக்கப்பட்டுள்ள தனித்துவமான கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதிப்பதற்காக 5 பெண்கள் உள்ளிட்ட 50 ராணுவ அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தது.

தன்னார்வலர்களின் முதல் குழுவுக்கு இன்று (புதன்கிழமை) மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் இரசிய இராணுவ அமைச்சகத்தின் 48-வது மத்திய இயல்அறிவு ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும்.

இங்குதான் எபோலா நுண்ணுயிரித் தொற்று மற்றும் மெர்ஸ் நுண்ணுயிரித் தொற்று ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்த்கது.

இரசியாவில் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிப்பது வரும் மாதத்தில் முடிவடையும் என்று இராணுவ அமைச்சகம் சொல்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.