Show all

ஆன்மீகப் பயணமாக கைலாசா வரலாம்! நித்தியானந்தா அறிவிப்பு

நித்தியானந்தா ஆன்மீகப் பயண விரும்பிகளை கைலாசாவுக்கு அழைத்துள்ளார். நுழைவு அனுமதியும் விமானக் கட்டணமும் ஆஸ்திரேலியாவிலிருந்து இலவசமாம்.

03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து அதன் கிளைகளை பல நகரங்களில் விரிவுபடுத்திய நித்தியானந்தா, தான் உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா வருவதற்கான நுழைவு அனுமதிக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

நித்தியானந்தா, தான் வசிப்பதாகக் கூறும் கைலாசாவில் இருந்து அதன் சமூக ஊடக பக்கம், வலையொளி வாயிலாக சத்சங்கம் என்ற பெயரில் அன்றாடம் ஆன்மிக சொற்பொழிவை வழங்கி வருகிறார்.

அவரது சத்சங்க நிகழ்வு எந்த இடத்தில் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு அந்த காட்சிகள் நேரலை பின்னூட்ட வலைபின்னல் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நித்தியானந்தா, நேபாளத்திலோ இமயமலை பகுதியிலோ இருக்கலாம் என்று கூறப்பட்டது. அங்கிருந்தபடி அவர் கைலாசா என்ற தானே அறிவித்துக் கொண்ட இடத்தில் இருந்து சொற்பொழிவை நடத்துவதாக பேசப்பட்டது.

நித்தியானந்தா ஆறு மாதங்களுக்கு முன்பு தனது கைலாசாவின் சார்பில் கட்டுப்பாட்டு வங்கியொன்றை தொடங்கியிருப்பதாகக் கூறி கைலாசாவுக்கான செலாவணியையும் கடவுச்சீட்டையும் அறிமுகப்படுத்தினார்.

கடந்த ஆண்டு இதே சமயத்தில் நித்யானந்தாவின் இருப்பிடம் தொடர்பான சர்ச்சை வலுத்தபோது, நித்தியானந்தாவின் பெயரிலான இந்தியாவுக்கான கடவுச்சீட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்தது.

நித்யானந்தா, எக்வடோர் நாட்டில் உள்ள ஒரு தீவை வாங்கியதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டாலும் அதை அந்த நாட்டு அரசு உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமை தனது சத்சங்க நிகழ்வின்போது கைலாசாவுக்கு 3 நாட்கள் நுழைவு அனுமதியில் வர விண்ணப்பிக்கலாம் என்று கூறி அதற்கு எப்படி வர வேண்டும் என்ற விவரங்களை வெளியிட்டிருக்கிறார் நித்தியானந்தா.

அந்த சொற்பொழிவின்போது, இன்று முதல் கைலாசா நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு நீங்கள் வர வேண்டும். அங்கிருந்து கைலாசாவுக்கு வர கைலாசாவுக்கு சொந்தமான தனியார் விமானச் சேவை உள்ளது. அதன் மூலமாக நீங்கள் அழைத்து வரப்படுவீர்கள். தயவு செய்து 3 நாட்களுக்கு மேல் கைலாசாவுக்கு நுழைவு அனுமதி கோரி விண்ணப்பிக்காதீர்கள். அந்த மூன்று நாட்களில் ஒரு நாள் மட்டுமே காட்சிக்கு அனுமதிக்கப்படும். நுழைவு அனுமதி கோரி மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். கைலாசாவுக்கு வருவதென்றால் ஆஸ்திரேலியாவுக்கு வர ஒரு கிழமை நுழைவு அனுமதியை வாங்குங்கள். ஆஸ்திரேலியா வந்த பிறகு தனியார் விமானச் சேவையில் நீங்கள் கைலாசாவுக்கு வரலாம். அந்த விமான சேவையின் பெயர் கருடா சேவை. ஒருவருக்கு தலா ஒரு காட்சி மட்டுமே வழங்கப்படும். அது 10 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம்வரை இருக்கும்.

அதற்கு மேல் காட்சி தருமாறு அழுத்தம் கொடுக்காதீர்கள். இங்கு வருவதற்கு எவ்வித பொருளாதார தேவையும் இல்லை. ஆஸ்திரேலியாவரை மட்டுமே நீங்கள் சொந்த செலவில் வர வேண்டும். மற்றபடி ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு வரும் விமானச் செலவு, கைலாசாவில் தங்குமிடம், உணவுச்செலவு எதுவும் கிடையாது. எல்லாமே இலவசம். ஒவ்வொரு நாளும் தலா 10 முதல் 20 பேர் வரை நான் பார்ப்பேன்.

இங்கு வருவோர், எல்லோரையும் நீங்கள் பரமசிவனாக பார்க்க வேண்டும். பரம சிவனுக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளது போன்றவற்றை மட்டுமே இந்த முழு ஆன்மிக உலகில் நீங்கள் காண வேண்டும். அதற்காகவே இந்த ஏற்பாடு என்று நித்தியானந்தா அந்த காணொளியில் பேசியிருக்கிறார்.

நித்தியானந்தா தெரிவித்த தகவலின்படி பார்த்தால், அவர் குறிப்பிடும் கைலாசாவுக்கு வர வேண்டுமானால், ஆஸ்திரேலியாவுக்கு வர வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார். அங்கிருந்து கைலாசா வருவதற்குத்தான் நுழைவு அனுமதி கோரி விண்ணப்பியுங்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், அவர் குறிப்பிடும் தனி நாடு என்பது பன்னாட்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.

அவர் குறிப்பிடும் கைலாசா, ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவாகவோ அந்த நாட்டுக்குட்பட்ட தீவாகவோ இருக்கலாம். ஆனால், தனது சத்சங்கத்தில் ஆஸ்திரேலியாவின் எந்த விமான நிலையத்துக்கு வர வேண்டும், அங்கிருந்து எவ்வளவு மணி நேர பயண தூரத்தில் கைலாசா உள்ளது போன்ற விவரங்களை நித்தியானந்தா வெளியிடவில்லை. அவர் குறிப்பிடும் நுழைவு அனுமதி என்பது ஒரு தீவுக்குள் நுழையும் அனுமதிச்சீட்டு போல வேறு ஏதேவொரு நாட்டால் கருதப்படலாம். அதே சமயம், நுழைவு அனுமதி கோரும் நபர்களின் விண்ணப்பங்கள் எந்த அடிப்படையில் கைலாசாவுக்கு வர தகுதி பெறும் என்பதையும் நித்யானந்தா தெளிவுபடுத்தவில்லை.

இந்தியாவில் இருந்தபோது அவர் நடத்தி வந்த பிடதி ஆசிரமம் பல்வேறு மர்மங்கள் நிறைந்ததாகவே பேசப்பட்டது. இப்போது வெளிநாட்டில் ஒரு தனித்தீவை வாங்கி அதை தனி நாடாக அறிவித்துக் கொண்டுள்ளபோதும் நித்தியானந்தாவின் பின்புலம் மர்மமாகவே தொடர்கிறதே என்று பேசப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.