Show all

கொரோனாவை விட பெருந்தொல்லை ஊரடங்கு! இது நமக்கு. இந்த அமைதி- திரும்பிப்போக மனமில்லாமல் வலசை வந்த பறவைகளை இங்கேயே தங்க வைத்துள்ளது

தமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள். தற்போதைய ஊரடங்கு அமைதி அவைகளுக்கு பிடித்துப் போய் விட்டதாம். 

21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள். தற்போதைய ஊரடங்கு அமைதி அவைகளுக்கு பிடித்துப் போய் விட்டதாம். 

இராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகள் சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாமல் தங்கியுள்ளன.

இராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தேர்த்தங்கல் கிராமம். அங்குள்ள கண்மாயை சுற்றி 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடு வனத்துறையினரால் தொடங்கப்பட்டது. கண்மாய்க்கு நடுவே மரங்கள் அதிக அளவில் உள்ளதால் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கவும், கூடு கட்டி வாழவும் பறவைகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது.

கண்மாயின் நடுவில் வனத்துறையினர் நீர்த் தேக்கம் வெட்டி தண்ணீரை தேக்கியுள்ளனர். இதனால் நீர்ப் பறவைகள் அதிக அளவில் அங்கு வாழ்ந்து வருகின்றன. அதேபோல் பறவைகளின் உணவுத் தேவைக்காக ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் 5 ஆயிரம் மீன் குஞ்சுகள் கண்மாயில் விடப்படும் இதனால் பறவைகளுக்கு தாராளமாக இரை கிடைக்கிறது.

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் ஐரோப்பிய பறவைகள் வலசை வருவது தொடங்கும். ஆனால் பருவமழை பெய்யாததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுப் பறவைகளின் வருகை மிகவும் குறைந்தது. ஆனால் கடந்தாண்டு போதிய பருவமழை பெய்ததால் ஐப்பசி மாதம் முதல் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரக்கோட்டை, சித்திரங்குடி, தேர்த்தங்கல், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், ஆகிய இடங்களில் பறவைகள் சராணலயங்கள் உள்ளன. ஆனால் இந்தாண்டு மற்ற சரணாலயங்களை காட்டிலும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு அதிக அளவில் பறவைகள் வந்துள்ளன. இந்த ஆண்டு இங்கு 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன என்பது அன்மையில் எடுத்த பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

தேர்த்தங்கல் சரணாயத்துக்கு இந்தாண்டு சைபீரியா உள்ளிட்ட இடங்களில் இருந்து வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, முக்குளிப்பான், மஞ்சள் மூக்குநாரை, நாமக்கோழி, சோலைக்குருவிக் கூட்டம், சாம்பல் நாரை, கரண்டிவாயன் நாரை, கருநீலஅரிவாள் மூக்கன், புள்ளி அலகு கூழைக்கடா, உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் வந்தன.

இங்கு வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் நீர் தேங்கிய கண்மாய்களை ஒட்டியுள்ள மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். கண்மாய் நீரில் குளித்து கோடை வெப்பத்தைத்  தணித்துக் கொள்வதோடு, இளைப்பாறியும் செல்லும். அந்த நேரங்களில் வாகன ஒலி, காற்று மாசு ஆகியவை காரணமாக பறவைகள் உல்லாசமாக சிறகடிக்க முடியாமல், காலை, மாலையில் மட்டுமே கண்மாய் நீரில் உற்சாக குளியல் போடும். பின் தை, மாசியில் புறப்பட்டு மீண்டும் தங்கள் இடத்துக்குத் திரும்பிச் சென்று விடும்.

ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கால் வாகன இரைச்சல், காற்று மாசின்றி அமைதியாக இருப்பதால் தேர்த்தங்கலில் உள்ள ஆயிரக்கணக்கான பறவைகள் அன்றாடம் பகலில் உல்லாசமாக கண்மாய் நீரில் நீந்திக் கொண்டு அப்பகுதியில் உள்ள மீன்களை உணவாக உட்கொள்கின்றன. மாலை கதிரவன் மறைந்ததும் பறவைகள் அனைத்தும் கண்மாயில் உள்ள மரங்களில் அடைகின்றன.

பொதுவாக ஐப்பசியில் வரும் வெளிநாட்டுப் பறவைகள் மாசி மாத இறுதியில் இங்கிருந்து கிளம்பி சென்று விடும் ஆனால் இன்னும் கிளம்பாமல் இங்கேயே தங்கியுள்ளன. பறவைகளைப் பொறுத்தவரை அமைதி, சுதந்திரம் எங்கு உள்ளதோ அந்த இடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே தங்கி விடும் என்கிறார் கடந்த அறுபது ஆண்டுகளாக அந்த வசிக்கும் குமரேசன் என்பவர்.

கொரோனா ஊரடங்கு பொதுமக்களுக்கு பாதிப்பை தந்தாலும் வன உயிரினங்களுக்கு அது சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதாகவே வனத்துறையினரால் நம்பப்படுகிறது: என்கிறார் வனசரகர் சதீஷ்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.