அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது. 25,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்பின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு நாளது 07,தை,தமிழ்த்தொடராண்டு-5122 புதன் கிழமை அன்று (20.01.2021) புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் டிரம்ப் ஆட்சியின் கடைசி ஆண்டில், அமெரிக்கா உலக நாடுகளுக்கு எவ்வளவு மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது என்ற விவரத்தை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள முதன்மைத் தகவல்கள் வருமாறு: கடந்த ஆண்டு உலக நாடுகளுக்கு 55.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 750 கோடி) ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்த விற்பனை 50.8 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் கோடி) சரிவை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 3.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.25 ஆயிரத்து 500 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது. கடந்த ஆண்டும் இந்தியா 6.2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.46.5 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கி உள்ளது. இந்தியாவை விட அதிகளவில் மொராக்கோ, 4.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33 ஆயிரத்து 750 கோடி) ஆயுதங்களை இந்த ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு 12.4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.93 கோடி) ஆயுதங்களை இந்த நாடு அமெரிக்காவிடம் இருந்து வாங்கி இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா அதிக அளவு ஆயுதங்கள் வாங்கியுள்ள நிலையில், பல நாடுகள் இந்த ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து குறைவான ஆயுதங்களையே வாங்கி உள்ளன. சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பெல்ஜியம், ஈராக், தென் கொரியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



