Show all

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்! உச்சஅறங்கூற்று மன்றம் கேள்வி.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தாமதம் ஆவது குறித்தும், தொகுதி மறுவரையறை பணிகள் முற்றாக எப்போது முடிவடையும் என்பது குறித்தும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்தும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக பிரமாண பத்திரம் ஒன்றை பதிகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் உள்ளதால் அது மாநிலத்தில் பல வளர்ச்சி பணிகளுக்கு தடையாக உள்ளது. எனவே, உச்சஅறங்கூற்று மன்றம் தலையிட்டு விரைந்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆணை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு பதிகை செய்துள்ளார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப் பட்ட  மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை நடந்து வருவதாகவும், இந்த பணி நிறைவு பெற்று தொகுதி மறுவரையறை தொடர்பான அறிவிப்பாணை அரசு இதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

இந்த விசாரணையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தாமதம் ஆவது குறித்தும், தொகுதி மறுவரையறை பணிகள் முற்றாக எப்போது முடிவடையும் என்பது குறித்தும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்தும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக பிரமாண பத்திரம் ஒன்றை பதிகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,202.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.