அப்படி இப்படி என்று இறுதியாக: மீதியுள்ள காலத்து 'தமிழக ஆட்சி' பதவி சுகத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணிதான் எடப்பாடி- பன்னீர் செல்வம் கூட்டணி. அந்தக் கூட்டணியின் நோக்கம் கொஞ்சமும் பிசுறு தட்டாமல் பார்த்துக் கொள்ள அந்தக் கூட்டணி என்ன வேண்டுமானாலும் செய்வது, யார் காலை வேண்டுமானலும் பிடிப்பது என்ற வகையில் அனைத்து சாம, பேத, தான, தண்ட முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இடைத் தேர்தல் முடிவுக்கு பின், 'தமிழகஆட்சி' பதவிசுகம் பறிபோக வாய்ப்பிருப்பதால், தங்களது அடுத்த வியுகத்தை தொடங்கியிருக்கிறது எடப்பாடி- பன்னீர் அணி. 14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆளும் அதிமுகவில், தற்போது, 114 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். திமுக கூட்டணிக்கு, 97 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தினகரன், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்; 22 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, தேர்தல் நடந்து முடிந்தது. மீதமுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு, தேர்தல் நடக்க வேண்டி உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,135.
தற்போதைய, ஆளும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் அறந்தாங்கி - ரத்தினசபாபதி, விருத்தாசலம் - கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி - பிரபு ஆகியோர், தினகரன் பக்கம் சாயும் மனநிலையில் உள்ளனர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற, தமிமுன் அன்சாரி, நடிகர் கருணாஸ் ஆகியோரும், ஆளும் அதிமுகவிற்கு எதிரான மன நிலையில் உள்ளனர். இவர்களை தவிர்த்து, ஆளும் அதிமுகவிற்கு, உறுதியான சட்டமன்ற உறுப்பினர்கள் 109 உள்ளனர்.
இடைத்தேர்தல் முடிவு வெளியானதும், ஆளும் அதிமுகவிற்கு பெரும்பான்மைக்கு இன்னும், ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. இடைத்தேர்தலில் எத்தனை தொகுதிகளில், வெற்றி கிடைக்கும் என, தெரியவில்லை. ஆளும் அதிமுகவிற்கு, ஒன்பது தொகுதிகளுக்கும் குறைவான இடங்கள் கிடைத்தால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். அதேநேரத்தில், தினகரன் ஆதரவு மனநிலை சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தால், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களின் எண்ணிக்கை குறையும். இதனால், தேர்தல் முடிவு வரும் முன், ஆளும் அதிமுக காய்களை நகர்த்த துவங்கி உள்ளது.
அதன் பொருட்டு: தினகரன் ஆதரவு மனநிலை சட்டமன்ற உறுப்பினர்களான, ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சட்ட அமைச்சர், சி.வி.சண்முகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் ஆகியோருடன் பேரவைத்தலைவர் தனபாலிடம், நேற்று புகார் அளித்தார். பேரவைத்தலைவர் தனபால், மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு, முதலில், கவனஅறிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளார் என, தகவல் வெளியாகி உள்ளது.
மூன்று பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஆளும் அதிமுக சட்டமன்றஉறுப்பினர்கள் எண்ணிக்கை, 111 ஆக குறையும். அப்போது, காலியிடங்கள் மூன்று போக, 231 சட்டமன்றஉறுப்பினர்கள் இருப்பர். பெரும்பான்மைக்கு, 116 சட்டமன்றஉறுப்பினர்கள் தேவைப்படுவர். அதற்கு, இடைத்தேர்தலில், குறைந்தது ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரை தவிர்த்தால், ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். எனவே, மூன்று பேரை தகுதி நீக்கம் செய்தால், 'தமிழகஆட்சி' பதவி சுகம் தொடர்ந்து அனுபவிப்பதற்கான சாதகமான சூழல் ஏற்படும். அவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்து, கட்சி தலைமைக்கு கட்டுப்படுவதாக கூறி, மீண்டும் வந்தாலும், ஆட்சிக்கு பலம் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டே, ஆளும் அதிமுக தலைமை காய் நகர்த்த தொடங்கி உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.