Show all

ஏழுபேர் விடுதலையைத் தாமதப் படுத்துகிறாரா ஆளுநர்! தமிழ்மக்கள் போராடினால் பார்த்துக் கொள்ளலாம் என்று

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன், உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஒரு கிழமை முடிந்துள்ளது.

ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள எழுவரை விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச அறங்கூற்றுமன்றம் கூறிவிட்ட நிலையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்தது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்புயள்ளதாக தகவல் கசிந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறது. அதில், எழுவரை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஏதும் அளிக்கப்படவில்லை என்று மறுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த வழக்கு மிகச் சிக்கலானது என்பதால் சட்டரீதியான, அரசியல்சாசன ரீதியான, நிர்வாக ரீதியான விசயங்களை ஆராய வேண்டியுள்ளது என்றும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், தீர்ப்புகள், சட்டக் குறிப்புகள் வெள்ளியன்றுதான் மாநில அரசிடமிருந்து தங்களுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படும் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு, அரசியல் சாசனத்திற்குட்பட்டு நியாயமான முறையில் முடிவெடுக்கப்படும் என்றும் தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

அரசியல் சாசனத்தின் அந்த 161வது பிரிவு சொல்வது என்ன:

ஒரு மாநிலத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களில், சட்டத்திற்கு எதிராக குற்றம் புரிந்து தண்டிக்கப்பட்ட ஒருவரது தண்டனையைக் குறைக்க, விடுவிக்க, மன்னிப்பு அளிக்க, தற்காலிகமாக நிறுத்தி வைக்க, ரத்து செய்ய மாநில ஆளுநருக்கு உரிமை உண்டு என்கிறது இந்தப் பிரிவு.

மாநில ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவுகளையே செயல்படுத்துபவர் என்பதால், இந்த விவகாரத்திலும் மாநில அமைச்சரவையின் கருத்தை ஏற்றே அவர் செயல்பட வேண்டும். பாஜக ஆட்டுவிப்பில் நமது ஆளுநர் தன்னிச்சையாக குறுக்கு சால் ஓட்டி வந்து கொண்டுதான் இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் மாநில அரசின் முடிவை ஏற்பதைத் தவிர, இனி ஆளுநர் செய்வதற்கு எதுவுமே இல்லை. ஆளுநர் உள்துறையைக் கேட்கலாம், சட்ட நிபுணர்களை ஆலோசிக்கலாம். ஆனால், 161ன் கீழ் செய்யப்படும் பரிந்துரையை ஆளுநர் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என மாரு ராம் வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பு பொருந்திப் போகிறது என்கிறார் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் தியாகு.

மாரு ராம் வழக்கில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் உள்ளடக்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியபோது, ஒரு குற்றவாளிக்கு விடுதலையளிக்கும்போது சட்டத்திற்குட்பட்டு விடுதலையளிக்க வேண்டும், பாரபட்சம் காட்டக்கூடாது என்று சொன்னதோடு, அரசியல் சாசனத்தின் 72வது பிரிவின்படி குடியரசுத் தலைவரும் 161வது பிரிவின்படி மாநில ஆளுநரும் அமைச்சரவை பரிந்துரையின்படி இந்த மன்னிப்பை வழங்க வேண்டுமென்று தெரிவித்தது. 

அரசியல் சாசன ரீதியாக ஆளுநர் தலைவரே தவிர, அவர் தம் விருப்பப்படி செயல்பட முடியாது. அமைச்சரவை முடிவின்படியே செயல்பட முடியும்.

ஒவ்வோர் அரசும் தங்களுடைய ஆட்சியில் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்றுதான் நினைக்கிறார்கள். மக்களும்கூட அப்படியே கருதுகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. சட்டத்தின் ஆட்சிதான் இங்கு நடக்கிறது. 161வது பிரிவின் கீழ் விடுதலையளித்தால், மாநில ஆளுநர் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய சட்ட ரீதியாக இருக்கும் ஒரே வாய்ப்பு, மீண்டும் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றுவதுதான். அது மாநில அரசுக்கு அரசியல் தற்கொலையாக அமையும். ஆகவே அப்படிச் செய்யமாட்டார்கள். காலதாமதம் ஆனாலும் விடுதலை நடந்தே தீரும் என்கிறார் தியாகு.

இந்த விவகாரம் தொடர்பாக தன் கருத்தைத் தெரிவித்த உச்ச அறங்கூற்றுமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் மார்கண்டேய கட்ஜு, 7 பேரையும் விடுவிப்பதைத் தவிர ஆளுநர் வேறு விதமாக முடிவெடுக்க முடியாது என்றே கூறியிருக்கிறார்.

நம்முடைய நாடாளுமன்ற ஜனநாயகம் பிரிட்டனைப் பின்பற்றியது. ஆளுநர் என்பவர் பிரிட்டனின் அரசரைப் போன்றவர். அரசியல் சாசன ரீதியாக அவர் தலைவரே தவிர, அவர் தம் விருப்பப்படி செயல்பட முடியாது. அமைச்சரவை முடிவின்படியே செயல்பட முடியும். ஷாம்ஷேர் சிங் வழக்கில் 7 அறங்கூற்றுவர்கள் அடங்கிய உச்ச அறங்கூற்றுமன்ற அமர்வு இதைத் தெளிவாக்கிவிட்டது என்கிறார் கட்ஜு.

இதை தொடர்ந்து மாரு ராம், கேஹர் சிங் வழக்குகளிலும் குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் அமைச்சரவையின் முடிவுகளையே செயல்படுத்த வேண்டுமே தவிர, தங்கள் விருப்பப்படி முடிவெடுக்கக்கூடாது என்பது உச்ச அறங்கூற்றுமன்றத்தால் தெளிவாக்கப்பட்டுவிட்டது என்பதையும் மார்கண்டேய கட்ஜு சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில், மாநில அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் முடிவெடுத்தால், அது மாநில அரசின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் என்கிறார் ஹரி பரந்தாமன். அதே சமயத்தில் விரைவில் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தினால், பொதுமக்களின் எழுச்சி மூலமாக உருவாகும் அரசியல் நெருக்கடி ஆளுநரை ஒரு முடிவெடுக்கவைக்கும் என்கிறார் அவர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,912.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.