Show all

வடசென்னை மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்! துறைமுக அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பை உறுதிசெய்யும் சுங்கத் துறை அதிகாரிகள்

சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாகவே உள்ளது என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை துறைமுகத்தில் பறிமுதல் செய்து, கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாகவே உள்ளது என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனானில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது முந்;தாநாள் வெடித்து சிதறியதில் 100 பேர் பலியாகிவிட்டனர். 4000 பேர் காயமடைந்தனர். 2 லட்சம் பேர் வீடுகளை இழந்துவிட்டனர். இந்த நிலையில் சென்னை துறைமுகத்திலும் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னை மணலியில் துறைமுகத்திற்கு சொந்தமான கிடங்கில், பறிமுதல் செய்து கடந்த ஆறு ஆண்டுகளாகப் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் தற்போதும் பாதுகாப்பாகவே உள்ளதாக ஆய்வு மேற்கொண்ட, சுங்கத் துறை அதிகாரிகள், வேதிப்பொருள் துறை அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லெபனான் போல் சென்னையில் வெடிவிபத்து நடக்காது. லெபனானில் பறிமுதல் செய்யப்பட்ட வேதிப்பொருள் வெடித்து சிதறியது போல் சென்னையில் ஏற்படும் என அச்சம் வேண்டாம். இந்த கிடங்கு குடியிருப்பிற்கு வெகு தொலைவில் இருக்கிறது. எனவே சென்னை மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

மின் ஏல முறையில் அம்மோனியம் நைட்ரேட் ஏலத்திற்கு விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் கொரியாவில் வாங்கி சென்னையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த அம்மோனியம் நைட்ரேட் கரூர் அம்மன் வேதியியல் நிறுவனத்திற்கு சொந்தமானது.

இந்த நிறுவனம் அனுமதியின்றி இந்த வேதிப்பொருளை இறக்குமதி செய்ததால் இதை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வேதிப்பொருளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கரூர் வேதியியல் நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த அறங்கூற்றுமன்றம் ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த அம்மோனியம் நைட்ரேட்டை ஒப்படைக்க முடியாது என கூறியதாகவும், அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விட உத்தரவிட்டதாகவும் தெரியவருகிறது. ஆனாலும் ஏலம் விடப்படாமைக்கு வழக்கமான அரசு அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக இருக்கலாம் எனப் பேச்சு ஓடிக் கொண்டு இருக்கிறது. அதிகாரிகளால் கொரோனா ஊரடங்கு காரணமும் முன்வைக்கப் படுகிறது. 

எது எப்படி இருந்த போதும் லெபனான் அபாயம் காரணம்பற்றி, தற்போது இணையம் மூலம் ஏலம் விட முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் தற்போது முடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.