இந்தப் புலிக்குட்டி மக்கள் ஆதரவைத் திரட்டி திருவள்ளுவர் தெரிவிக்கும் ‘தம்மின் தம் மக்கள் அறிவுடைமை’யை நிறுவினால் மகிழ்ச்சியே. 26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசியதாவது: அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியிருக்கிறது. குகையில் இருந்து சிங்கம் வெளியேறி விட்டது. இனி வேட்டை தான். என்று பேசியிருக்கிறார். விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன். பாவேந்தர் பாரதிதாசனின் சிறுத்தையே வெளியில் வா பாடல் தமிழகத்தின் பேரறிமுகமான பாடல். தமிழகம் விரும்பும் அந்தப் பாடலுக்கும், தன் தந்தை தனக்கு வைத்த பெயரின் அடிப்படையிலாவது குகையில் இருந்து சிறுத்தை வெளியேறியது என்று ஒப்புமை படுத்தியிருந்தால் கொஞ்சம் அசத்தலாக இருந்திருக்கும். எப்படியிருந்தாலும் இந்தப் புலிக்குட்டி மக்கள் ஆதரவைத் திரட்டி திருவள்ளுவர் தெரிவிக்கும் ‘தம்மின் தம் மக்கள் அறிவுடைமை’யை நிறுவினால் மகிழ்ச்சியே. எக்காலத்திற்கும் தமிழக இளைஞர்களுக்கு பொருந்தக் கூடிய, பாவேந்தர் பாரதிதாசனின் சிறுத்தையே வெளியில் வா பாடல், இங்கே இளைஞர் விஜயபிரபாகரனுக்காக: தேமுதிகவின் பலத்தை மீட்டெடுக்கும் வகையில் நாம் செயல்படவேண்டும். எங்கே விட்டோமோ, அந்த இடத்திலேயே மீட்டெடுக்க வேண்டும். 10 விழுக்காட்டு வாக்குகளை மீண்டும் பெற்று, நாம் யார் என்று நிரூபிக்க வேண்டும். விஜயகாந்தின் மகனாக என்னைப் பார்க்காதீர்கள்! உங்களில் ஒருவனாக பாருங்கள். ‘நண்பா’, ‘மச்சான்’, ‘தோழா’ என அழையுங்கள். எனக்கு தன்னம்பிக்கை அதிகம். எனது தந்தையை உங்கள் துணையோடு ஆட்சிகட்டிலில் அமர வைப்பேன். நம்மை குறைத்து மதிப்பீடு செய்து, இடம் நிர்ணயிக்கின்றனர். நமக்கு இடம் நிர்ணயிக்க அவர்கள் யார்! விஜயகாந்திற்கு கொடுத்து தான் பழக்கம்; வாங்கிப் பழக்கமில்லை. அதிமுக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும். விருத்தாசலம், பண்ருட்டியில் விஜயகாந்த்தும், பிரேமலதாவும் போட்டியிட வேண்டும்” என்று மிகவும் ஆவேசமாக பேசினார். தொடர்ந்து பேசிய விஜய பிரபாரகன், அதிமுக ஆட்சி மீதும், முதல்வர் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால், திமுக மீது எந்த விமர்சனத்தை முன் வைக்கவில்லை. அதேநேரத்தில் தலைமைஅமைச்சர் மோடி குறித்துப் பேசுகையில், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி எங்கள் முதுகில் குத்தி விட்டது. இதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பர் என்றும் விஜய பிரகாகரன் தெரிவித்தார்.
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!
விஜயபிரபாகரன் மேலும் பேசும்போது, தேமுதிகவை குறைவாக எள்ளி நகையாடிவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். இனி நாம் சுதந்திர பறவை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.