தமிழர் பண்பாட்டு அடையாளமான பனைமரம், தமிழர்தம் பலவகையான பயன்பாடுகளில் முதன்மை பெற்று வந்தது. பனை ஓலைகள் தாம் பழந்தமிழர் அழியாத இலங்கியங்களை எழுதிடும் தாளாக அமைந்தன. அந்தப் பனைக்கு மீண்டும் உயர்வு பெற்றுத்தர களமிறங்கி இருக்கிறார் நாகையில் தமிழாசிரியர் ஒருவர். 18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழாசிரியர் கார்த்திகேயன் அகவை 32. நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த இவர் பனங்கிழங்கு இனிப்புக்களி (அல்வா) தயாரித்து அசத்தி வருகிறார். வேதாரண்யம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகளில் கார்த்திகேயனின் பனங்கிழங்கு இனிப்புக்களி சிறப்பு இனிப்பாக பரிமாறப்பட்டு வருகிறது. இதுகுறித்து கார்த்திகேயன், “கடந்த ஆண்டு கஜா புயல் தாக்கத்தில் நாகப்பட்டினம் மட்டுமின்றி தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கழிமுக மாவட்டங்களில் உள்ள பல லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து போனது. ஆனால் ஒரு பனை மரம் கூட சாய்ந்து போகவில்லை. எனவே பனை மரத்தின் சல்லி வேர்கள் அத்தனை வலிமையானவை ஆகும். பனை மரத்தை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என்னுடைய குறிக்கோளாகும்” என்று தெரிவிக்கிறார். பனங்கிழங்கு பசியைத் தூண்ட வல்லது மற்றும் இது சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் மலச்சிக்கலை நீக்குவதோடு உடலில் உள்ள கழிவுகளையும் பிரித்து வெளியேற்றுகிறது. பனங்கிழங்கில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களை தயார் செய்யலாம். பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவையுடன் வெல்லம் இணையும்போது இரும்புச்சத்து கூடுதலாக கிடைக்கிறது. இதனால் அதை உண்ணும் போது உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. உடல் எடையை குறைத்து உடலை வலிமையாக்குகிறது. கடந்த ஆண்டு பனங்கிழங்கிலிருந்து பர்பி செய்தேன் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஆண்டு இனிப்புக்களி செய்துள்ளேன். மேலும் பனங்கிழங்கில் இருந்து அதிரசம், இனிப்பு முறுக்கு, கார முறுக்கு, பனியாரம், கேசரி, தோசை என கிட்டத்தட்ட 25 வகையான உணவு பொருட்களை செய்து சாதனை படைப்பதுதான் என்னுடைய லட்சியம் என தமிழாசிரியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பனங்கிழங்கு தயாரிப்பு முறை குறித்து ஆசிரியர் கார்த்திகேயன் கூறும்போது, “பனங்கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் அதை நன்கு உலர வைக்க வேண்டும். உலர்ந்தபின் அதை மாவாக்கி அதனுடன் முந்திரி, ஏலக்காய், நெய் சேர்த்து வெல்லப் பாகு கலந்து ஆடுப்பில் வைத்துக் கிண்டினால் சுவையான பனங்கிழங்கு இனிப்புக்களி தயார்” என கூறியுள்ளார். தமிழர் தம் பண்பாட்டு அடையாளமான பனையை போற்றுதும் பனையைப் போற்றுதும். மேலும் தற்போதைய தமிழ்நாட்டு அரசின் ‘மரம்’ அடையாளமாக பனையையே தமிழர்கள் கொண்டுள்ளோம். அசத்துங்கள் தமிழாசிரியரே! வாழ்த்துகிறோம், தொடர் வெற்றி பெற்றிட. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,265.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



