தமிழ்நாட்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக மாணவர்கள் நலனுக்காக, ஒன்றிய பாஜக அரசின் தான்தோன்றித்தனமான புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கைக்கு மாறாக, அந்தத் தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒன்றிய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில், மாணவர்களின் திறனைச் சோதிக்க ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தவேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது. அதன் பொருட்டு- தமிழ்நாட்டில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் தழுவிய அளவில் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் தழுவிய அளவில் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து. இதற்கான அரசானையும் நாளது 27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (13.09.2020) வெளியிட்டது. இந்தத் தேர்வினால் மாணவர்களின் கல்வி- ஐந்தாம் வகுப்போடோ, எட்டாம் வகுப்போடோ தடைபடும் வாய்ப்பு மிகமிக அதிகம் அதனால் இந்தத் தேர்வு வேண்டாம் என்று தமிழகக் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்ததார்கள். இது மாணவர்களின் மன நலனைப் பாதிக்கும் என்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இந்த நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வு ரத்துசெய்யப்படுவதாக மாநில கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். இன்று காலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார். ‘இது வரவேற்கத்தக்க முடிவு, மக்களாட்சி மாண்புக்கு உட்பட்டு தமிழக அரசு நடந்திருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியடைவார்கள். மேலும் 14அகவைக்குட்பட்ட குழந்தைகளுக்கு இம்மாதிரி ஒரு தேர்வை வைப்பதே தவறு. ஒரு குழந்தை தான் பழகியவர்களிடம்தான் இயல்பாகப் பேசும், பதில் சொல்லும். திடீரென புதிதாக ஒரு ஆசிரியர், தேர்வுமுறை என்றால் குழந்தைகளால் எப்படி இயல்பாக பதிலளிக்க முடியும்? எந்த நாட்டில் இப்படி ஒரு தேர்வு முறை இருக்கிறது? செய்த தவறை மாநில அரசு திருத்திக்கொண்டிருக்கிறது. அது வரவேற்கத்தக்கது என்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. ஒன்றிய பாஜக அரசின் நெருக்கடிக்கு பயந்து- இந்த பொதுத் தேர்வை அறிமுகப்படுத்துவதில் தமிழக அரசு பல முறை மாற்றி, மாற்றிப் பேசி வந்தது. ஒரு கட்டத்தில் இந்த ஆண்டே தேர்வை நடத்தப்போவதாகவும் அறிவித்தது. தேர்வு நடத்தப்படும் முறை குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இவற்றுக்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், இந்த முடிவை மாநில அரசு அறிவித்துள்ளது பாராட்டிற்குரியது என்று கல்வியாளர்கள் நன்றி பாராட்டுகிறார்கள். நீட் தேர்விலும் இது போன்ற துணிச்சல் நடவடிக்கையை, தமிழக அரசிடம் இருந்து, மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். தமிழக அதிமுக அரசு மிக விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டாவது, முன்னெடுக்கட்டும் அந்த வரலாற்று முயற்சியையும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



