எட்டு வழிச்சாலை அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிட்ட உயர் அறங்கூற்றுமன்ற தீர்ப்;பைக் கேட்ட சேலம் உழவர்கள், அரசு நட்ட அளவீட்டுக் கற்களைப் பிடுங்கி வீசிவிட்டு, நிலத்தைத் தொட்டு வணங்கினர். 25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், உழவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் அறங்கூற்றுமன்றம், சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என தெரிவித்து, எட்டு வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் தீர்ப்பை வரவேற்று சேலம், அயோத்தியா பட்டினத்தை அடுத்த ராமலிங்கபுரத்தில் உழவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அரசு சார்பில் தங்களின் நிலத்தில் நடப்பட்டிருந்த அளவீட்டு கற்களைப் பிடுங்கித் தூரமாக வீசினர். நிலத்துக்குக் கற்பூரம் காட்டி வழிபட்டனர். 'சேலம் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் பேரியக்கம்' சார்பில் தீர்ப்பு தொடர்பாகக் கூறும்போது, 'அறங்கூற்றுமன்றம்தான் அரசாணையை ரத்து செய்துள்ளது. தமிழக அரசே இதனை முன்வந்து ரத்துசெய்யவேண்டும். அரசே செயல்படுத்தும் வரையில் கருத்துப்பரப்புதல் தொடரும்' என்றனர். உழவர்கள் சிலர் இதுகுறித்துப் பேசும்போது, 'நாங்கள் சாதாரணமாக வெளியே போனால் கூட இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று காவல்துறையினர் கண்காணித்தனர். அவர்களில் சிலர் எங்களை பயமுறுத்தவும் செய்தர். இத்தனை நாட்கள் கழித்து இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறோம். வேளாண் நிலத்தை அழித்துத்தான் திட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதில்லை. இந்த தீர்ப்பு, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நெடுவாசல் ஆகியவற்றுக்கும் முன்னுதாரணமாக அமையவேண்டும் என்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,116.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.