முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் என ஆளும் கட்சியைச் சார்ந்த பலரும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றே புளுகி வருகின்றனர். இந்த நிலையில் அதை உண்மையாக்கும் வகையாக, கேரள அரசின் உதவி தங்களுக்கு தேவையாய் இல்லை என மறுத்திருக்கிறது எடப்பாடி அரசு. 05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்துக்கு தொடர்வண்டி மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத் தயார் எனக் கேரள அரசு அறிவித்த நிலையில் அதை வேண்டாம் எனத் தமிழகம் மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார்கள். சென்னையின் திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர் வண்டிகளே ஊர்கின்றன, நடுத்தர மக்களின் சேமிப்பு எல்லாம் தண்ணீர் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கே செலவாகிக் கொண்டிருக்கிறது. சென்னையின் தண்ணீர் விநியோகத்தில் மிகவும் முதன்மையானவையாக இருந்த நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டன. சோழவரம், போரூர், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் கடந்த ஆண்டின்போது இதே நேரத்திலிருந்த தண்ணீரின் அளவில், நூற்றில் ஒரு பங்கு அளவுதான் தற்போது இருக்கிறது. ஏரிகளின் தற்போதைய அளவு, அவற்றின் மொத்த கொள்ளளவில் 0.2 விழுக்காடு மட்டும்தான். இந்நிலையில் இன்று மதியம் தமிழகத்துக்கு தொடர்வண்டி மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத் தயார் எனக் கேரள அரசு அறிவித்தது. திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் லிட்டர் நீரை தொடர்வண்டி மூலம் சென்னைக்குக் கொண்டு செல்ல கேரள முதல்வர் பினராயி உத்தரவு பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. சென்னையில் நிலவி வரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சியைக் கேரள அரசு செய்தது. கேரள அரசு உதவ முன்வந்தபோதும் தமிழக அரசு வேண்டாம் என மறுத்ததாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்குக் குடிநீர் வழங்க மாநில அரசு முன்வந்தது. இது தொடர்பாகத் தமிழக முதல்வர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிவித்தபோது தற்போது இதற்கான தேவை இல்லை எனப் பதில் கொடுத்தனர். திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் லிட்டர் நீரை தொடர்வண்டி மூலம் சென்னைக்குக் கொண்டு செல்ல கேரளா முயன்றது. சென்னையில் உள்ள முதன்மை நீர் நிலைகளும் வறண்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் கேரள அரசு உதவ முன்வந்தது என அவர் பதிவிட்டுள்ளார். தமிழக அரசு இதுகுறித்து எந்த ஒரு பதிலும் இதுவரை தெரிவிக்காத நிலையில், இணைய ஆர்வலர்கள் தமிழக அரசை கண்டித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,189.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



