Show all

அழைத்துப் பாராட்டி ஊக்குவித்த மாவட்ட ஆட்சியர்! இலட்சியம் குறித்த கட்டுரைக்கு, மாணவிக்குக் கிடைத்த பெருமிதம்

மனோபிரியா என்ற மாணவி, எதிர்காலத்தில் நான் மாவட்ட ஆட்சியராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட ஆட்சியர்தான் என்று விடை எழுதியிருந்தார். இதன் பொருட்டு அந்த மாணவியை அழைத்துப் பாராட்டினார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆண்டுத்தேர்வில், நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆசைப்படுகிறீர்கள் ? உங்களின் முன்மாதிரி மனிதர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

அப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி மனோபிரியா என்ற மாணவி, எதிர்காலத்தில் நான் மாவட்ட ஆட்சியராக  விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட ஆட்சியர்தான் என்று விடை எழுதியிருந்தார். விடைத்தாளை திருத்திய பள்ளி ஆசிரியர் பூபதி, வியப்படைந்து, இது குறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு புலனம் மூலம் தகவல் தெரிவித்தார். 

இந்தத் தகவலைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாணவி மனோப்பிரியாவின் கனவுக்கு அடித்தளம் மிடும் வகையிலும், அவரது எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அந்த மாணவியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வர உத்தரவிட்டார்.

இதையடுத்து பள்ளி ஆசிரியர் பூபதி, மாணவி மனோபிரியா மற்றும் விளையாட்டு, கலை, இலக்கிய போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகததிற்கு அழைத்து சென்றார். அங்கு மாவட்ட ஆட்சியராக விரும்பிய மனோபிரியாவை பாராட்டிய  மாவட்ட ஆட்சியர் அன்பழகன், பின்னர் யாரும் எதிர்பாராத வண்ணம், தான் அமர்ந்திருந்த இருக்கையில் மனோபிரியாவை அமர வைத்து, நன்கு படித்து எதிர்காலத்தில் நீங்கள் நினைத்தது போல் ஒரு மாவட்ட ஆட்சியராக உருவாகி இது போன்ற இருக்கையில் அமர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கும், நமது நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்றார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பாராட்டினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,153.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.