இந்தமுறை தமிழகத்தில் திமுக ஆட்சி அமையப்போகிறது என்பதை, உள்ளங்கை நெல்லிக்கனியாக, பரவலான மக்கள் கருத்தோட்டத்தால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆம் உண்மைதான் என்று பறைசாற்றுகிறது புதிய தலைமுறையின் கருத்துக் கணிப்பும். 10,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: புதிய தலைமுறை நடத்திய மக்கள் நாடித்துடிப்பு தொடர்பான கருத்துக் கணிப்பில், பல முனை போட்டி நிலவினால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 38.51 விழுக்காட்டு பேர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக தேர்தலை ஒட்டி புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி, ஏபிடி நிறுவனத்தோடு இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. அதில், உங்கள் தொகுதியில் பலமுனை போட்டி ஏற்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு 38.51 விழுக்காட்டு பேர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 28.39 விழுக்காட்டு பேர்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதாவது திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையேயான வாக்கு வேறுபாடு 10விழுக்காடு அளவுக்கு இருக்கிறது. இதனால் திமுக எளிதாக ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க குறைந்தது 33 அல்லது 34 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தால் போதும் என்ற நிலை உள்ளது. திமுக கூட்டணி அதைவிட அதிக வாக்கு விழுக்காட்டை பெற்றிருப்பதாக இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. எனவே இந்த கருத்துக்கணிப்பு அடிப்படையில் பார்த்தால் தமிழக மக்கள் இந்தமுறை திமுகவிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்கவிருக்கின்றார்கள் என்று தெரியவருகிறது. தமிழகத்தில் இந்தமுறை சட்டமன்றத் தேர்தலுக்கு ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. எனவேதான் பல முனை போட்டி ஏற்பட்டால் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது என்று, இந்த கருத்துக்கணிப்பு நடத்திய ஏபிடி கருத்துக்கணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.