கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த தேமுதிக இந்தமுறை அமமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. 03,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த தேமுதிக இந்தமுறை அமமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் வரையிலும்கூட தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க இருபெரும் திராவிடக் கட்சிகளும் முட்டி மோதின. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து முதல்வர் வேட்பாளரானார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவு கசப்பான அனுபவத்தையே தேமுதிகவிற்கு கொடுத்தது. போட்டியிட்ட 104 தொகுதிகளில், 103 தொகுதிகளில் வைப்புத் தொகை கிடைக்கவில்லை. தேமுதிக தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடித்துவந்தபோதும், அந்தக் கட்சிக்கு போதிய முதன்மைத்துவத்தை அளிக்கவில்லை அதிமுக. ‘எங்களைக் கூட்டணிக்; கலந்துரையாடலுக்கு அழையுங்கள்’ என தேமுதிக வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்தும் அதிமுக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து, பாமக, பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகு கடைசியாக தேமுதிகவைக் கலந்துரையாடலுக்கு அழைத்தது அதிமுக. கூடவே குறைவான தொகுதிகளை, அதிலும் தேமுதிக விரும்பிய தொகுதிகளை ஒதுக்க மறுத்தது அதிமுக. அதிமுகவை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம். கண்டிப்பாக இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களைத் தோற்கடிப்போம்’ என அமமுக ஒருபுறம் களமிறங்க, மறுபுறம் தேமுதிகவும் தற்போது அதிமுகவிற்கு எதிராக வீரியமாக கம்பைச் சுழற்றத் தொடங்கியிருக்கிறது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு சென்னை, வட தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்தை ஒட்டி பெருவாரியான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கட்சியின் பொருளாளர், பிரேமலதா, விஜயகாந்த் முதன்முதலில் வெற்றிபெற்ற விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தநிலையில், அமமுக- தேமுதிக - எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்திருக்கும் இந்தக் கூட்டணியால் பாதிப்பு திமுக அணிக்கா? இல்லை அதிமுக அணிக்கா? என்பது குறித்து ஆய்வு முன்னெடுக்கப்பட்டு உறுதியாக அதிமுக கூட்டணிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முடிவு கிடைக்கிறது. அமமுக தனித்துப் போட்டியிட்டாலே அது தென்மாவட்டங்களில் அதிமுகவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த தகவல். தற்போது தேமுதிகவும் இணைந்திருப்பதால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாகும். அமமுகவுக்கு ஐந்தரை விழுக்காடு வாக்குகள், தேமுதிகவுக்கு இரண்டரை விழுக்காடு வாக்குகள், இன்னும் சிறிய கட்சிகளின் வாக்குகள், சசிகலாவை சேர்க்காததால் அதிமுக மீது வெறுப்பில் இருக்கும் தொண்டர்களின் வாக்குகள் என அனைத்தையும் சேர்த்தால் பத்து விழுக்காடு வாக்குகள் உறுதியாக இந்த கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி வெற்றிபெறுகிறதோ இல்லையோ, அதிமுக கூட்டணியின் வெற்றியை உறுதியாகத் தடுக்கும். தென்மாவட்டங்கள் மட்டுமல்ல, தேமுதிக போட்டியிடும் நடு மற்றும் வட மாவட்டங்களிலும் அதிமுகவுக்குப் பின்னடைவே ஏற்படும். குறிப்பாக, தெலுங்கு சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் அதிமுக அதிக பாதிப்பைச் சந்திக்கும். தெற்கு மற்றும் கழிமுக மாவட்டங்களில் அதிமுக மீது நிறைய வெறுப்பு இருக்கிறது அங்கே அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும் வாய்ப்புகளே அதிகம் என்பதாக கருத்து அறியமுடிகின்றது. எது எப்படியோ! பாஜக அடிமையாக- தமிழகத்தின் அனைத்து அதிகாரங்களையும் அடகு வைத்து- ஊழலுக்கு மட்டுமே உதவும் ஆட்சி நிருவாகத்தைக் கொண்டாடி வரும்- அதிமுக தேற்கடிக்கப் படுவதே தமிழகத்தின் மீட்சியாக இருக்க முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.