தமிழக மக்கள் கொண்டாட, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை சென்னை அறங்கூற்றுமன்றம் வழங்கி பெருமைபெற்றிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர் 02,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பைப் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். நாசகார நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் உச்சமாக 08,வைகாசி,5120 (22.05.2018) அன்று காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 தமிழர்கள் மாண்டு போயினர். நெஞ்சை உறைய வைத்த இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில்- சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் இன்று வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என தீர்ப்பளித்திருக்கிறது. சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இநதத் தீர்ப்பு வெளியான உடனே, பொதுமக்கள் பல இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பை சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் வழங்கிய தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இப்போதாவது தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி, ஸ்டெர்லைட்க்கு எதிராக கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், வேதாந்தா குழுமத்தின் ஆலையான ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தின் அறங்கூற்றுவர் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் ஆகயோர் வழங்கியுள்ள தீர்ப்பு நியாயத்திற்குக் கிடைத்த வெற்றி, மகக்ள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 08,வைகாசி,5120 (22.05.2018)க்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான நிலையை தமிழ்நாடு அரசு எடுக்காமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருக்காது. 13 பேர் காவல்துறையினரால் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள். 13 பேர் சிந்திய இரத்தம், அவர்களின் உயிர்த் தியாகம் நியாயத்தைக் காப்பாற்றி உள்ளது. ஆனால் அவர்களை மனித வேட்டையாடிய காவல்துறையினர் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது, அந்தப் படுகொலைக்கு மாநில அரசே முழு காரணம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இப்போதாவது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினரை பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இந்த வழக்கும் தமிழ்நாடு அரசு காவல்துறையிடமிருந்து மாற்றப்பட்டு, நடுவண் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு கிணற்றில் போட்டக் கல்லாக இருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. இந்தப் படுகொலை குறித்து மக்கள் கண்காணிப்பகம் நிர்வாகச் செயலாளர் ஹென்றி திபேன் அவர்கள் ஓய்வு பெற்ற உயர்அறங்கூற்றமன்ற அறங்கூற்றுவர்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைக் காவல் அதிகாரிகளையும், தடயவியல் நிபுணர்களையும் கொண்டு தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், அனைத்துத் தரப்பினரையும் விசாரித்து 2400 பக்க அறிக்கையை மனித உரிமை ஆணையத்திலும் பதிகை செய்துள்ளனர். ஹென்றி திபேன் குழுவினர் அறிக்கை நடுவண் குற்றப்புலனாய்வுத் துறையிடமும் கொடுக்கப்பட்டது. மக்கள் உள்ளம் எரிமலையானதைக் கண்டு, தன்னுடைய நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றிக்கொண்டு, அறங்கூற்றுமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர் நிலை எடுத்தது. ஆனால்- சுற்றுச் சூழலைப் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எந்தச் சூழலிலும் அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சரவையைக் கூட்டி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. கொள்கை முடிவாக அறிவிக்கவும் இல்லை. இப்போதாவது தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி, அம்மாதிரியான கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் நியாயம் கிடைத்துள்ளது. ஆனால் 13 பேர் படுகொலைக்கு ஒரு விழுக்காடுகூட நியாயம் கிடைக்கவில்லை. இதற்கு மாநில, நடுவண் அரசுகளைக் குற்றம் சாட்டுகிறேன். ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்ற தீர்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 26 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. துளியளவும் சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் மக்கள் மன்றத்திலும், உயர்அறங்கூற்றுமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும், உச்சஅறங்கூற்றுமன்றத்திலும் நானே வாதங்களை எடுத்துவைத்துள்ளேன். இது நியாயத்திற்குத் கிடைத்த வெற்றி; மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.