ஒன்றியப் பாடத்திட்டத்தின் 12ம் வகுப்புத் தேர்வு கிடையாது என்பது ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சியே. ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பி, தமிழ்நாட்டில் மேனிலைத் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ அவர்களும், கி.வீரமணியும் கோரிக்கை விடுத்துள்ளனர். 20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய அரசுப் பாடத்திட்டத்து மேனிலைத் தேர்வு கிடையாது என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது ஒரு சூழ்ச்சியே என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வைகோவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒன்றிய அரசின் ஒன்றியப் பாடத்திட்டத்திலான மேனிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கின்றார், ஆனால், நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை. இந்த ஆண்டும் நடத்தப் போகின்றார்கள். அப்படியானால், அந்தத் தேர்வு எழுதுகின்ற அந்த மாணவர்களின் உடல்நலனில் தலைமை அமைச்சருக்கு அக்கறை இல்லையா? அவர்கள் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா? அவர்களை மட்டும் கொரோனா தொற்று தாக்காமல், விதிவிலக்கு அளிக்குமா? எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமே ஆகும். காரணம், அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்து திணித்து இருக்கின்ற புதிய கல்விக்கொள்கையின்படி, கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலைப்பள்ளித் தேர்வில் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை என்று கூறி இருக்கின்றார்கள். எனவே, இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எப்போதுமே மேனிலைப்பள்ளித் தேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என்பதுதான் அவர்கள் திட்டம் ஆகும். ஆனால், மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தமட்டில், மேனிலைப் பள்ளித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான், கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகின்றது. அயல்நாடுகளின் பள்ளி, கல்லூரிச் சேர்க்கைக்கும் அந்த மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் அதுவே தகுதியாக இருக்கின்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும்; நீட் தேர்வு கூடாது என்பதுதான், தமிழ்நாட்டின் கருத்து ஆகும். எனவே, ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்; கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒரு மாத முன் அறிவிப்போடு, மேனிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல், தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில், மேனிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்ற தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன் எனத் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு பாடத்திட்டத்திலான 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யும் ஒன்றிய அரசு, ‘நீட்’டை ரத்து செய்ய மறுப்பது ஏன்? என்று கி.வீரமணி அவர்களும்; கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஒன்றிய இடைநிலைக் கல்வித் தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் ஒன்றிய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது? இதில் உள்ள சூது சூட்சமத்தைப் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது. தமிழ்நாடு அரசு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல், மாணவர்கள் நலன், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஒன்றியக் கல்வித் துறை தலைமைஅமைச்சர் மோடி தலைமையில் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு அதிகமாக இருப்பதாகக் கூறி, ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் 12 ஆம் வகுப்புத் தேர்வை இவ்வாண்டு ரத்து செய்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது. ஆனால், அதே காரணங்கள் வலுவாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு என்ற நுழைவுத் தேர்வினை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை! அதை நடத்தியே தீருவோம் என்று கூறுகிறார்கள்!. தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான தேர்வு இதுவரை கொரோனாவின் வீச்சால் தள்ளிப் போடப்பட்டுள்ளது. சில மாதங்கள் கழித்து நிலைமை ஓரளவு சரியான பிறகு, பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்ற நிலையில், ஒன்றியக் கல்வித் துறை பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ததால், தமிழ்நாடு அரசு பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்று கருத்துக் கூறுமாறு, பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்களின் கருத்தை - மக்களாட்சியின் மாண்புக்கேற்ப கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. எட்டாவது, பத்தாவது வகுப்புத் தேர்வின் நிலை வேறு. பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள்தான் அவர்கள் மேலே கல்லூரியில், பல்கலைக் கழகங்களில் சேர்ந்து தொழிற்படிப்போ, மருத்துவப் படிப்போ, பட்டப் படிப்போ படிப்பதற்கு அடிப்படை கட்டுமானமாக அமையும் நிலை உள்ளது. மாணவர்களின் நலனா? வெறும் தேர்வா? எனும்போது, முதன்மைத்துவம் ஆனது மாணவர்களின் உயிர்தானே என்று கூறத் தோன்றும். மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் முடிவு எடுக்கப்படவேண்டும். ஆனால், அதேநேரத்தில், அறிவுப்பாடாக ஆழமாகச் சிந்தித்தால், மாணவர்கள் உயிருக்கும், உடல்நலத்துக்கும் பாதிப்பு வராத அளவுக்கு இப்பிரச்சினையில், ஒரு சிறந்த முடிவை எடுப்பது கட்டாயம் அவர்களது எதிர்கால வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் மிகவும் முதன்மையான முடிவு எடுக்கப்படவேண்டும். இந்தத் தேர்வினை மேலும் தள்ளிப் போடுவதோடு, நிலைமை சற்று தணிந்துவரும்போது, அத்தேர்வை போதிய - தக்க பாதுகாப்பு முன்னேற்பாட்டுடன் எழுத வைப்பதுபற்றி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை யோசிப்பதும், முடிவு எடுப்பதும் இன்றியமையாத ஒன்றாகும். தேர்வு நடத்தும் கூடங்களில் நல்ல இடைவெளி அமைத்து, தக்க பாதுகாப்பினை ஏற்படுத்தி, மாணவர்களின் எண்ணிக்கையை மய்யங்களில் குறைத்து, மய்யங்களையும், மேற்பார்வையாளர்களையும் அதிகரித்து, முகக்கவசம் மற்ற முன்னெச்சரிக்கையுடன் நடத்த யோசிப்பது நல்லது. இடைநிலைக் கல்விதிட்டத்தின் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் ஒன்றிய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது?. இதில் உள்ள சூது சூட்சமத்தைப் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது. நுழைவுத் தேர்வை திறனறிவுத் தேர்வு என்று ஆக்கி, பள்ளிப் பாடத் திட்டங்களுக்கு சம்பந்தமில்லாத ஒன்றை தங்களது முழு அதிகாரத்தின்கீழே (ஏற்கெனவே கொண்டு வந்துள்ள கல்வியை) ஒன்றிய அதிகாரமே ஆக்கிரமித்துக் கொண்ட நிலையை மேலும் ஆணியடிப்பதோடு, கல்லூரிகளில் நுழையவே இதுபோன்ற நுழைவுத் தேர்வே மீண்டும் என்பதைத் திட்டமிட்டு புகுத்தவே இந்த ஏற்பாடு நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் பரவலாக பல பகுதிகளில் நிபுணர்களிடையே, கல்வியாளர்கள் நடுவிலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தால், அது தகுதி திறமை பேசி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்ணைக் குத்தும் - காலங்காலமாய் நடந்துவரும் சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பதாகவே ஆகிவிடும் பேரபாயம் உள்ளது. காரணம், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் - மேற்படிப்பாகிய தொழிற்கல்லூரி, பல்கலைக் கழக பட்டங்களுக்கு நுழைவு வாயில் ஆகும். தமிழ்நாடு அரசு பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை நடத்துவதோடு, அந்த அடிப்படையில் ஏற்கெனவே கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் சட்டம் (T.N.Act 3 of 2007 Admission in professional Education Act) இன்னமும் ரத்து செய்யப்படாத நிலையில் உள்ள ஒரு சட்டமாகவே இருப்பதைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசே மருத்துவக் கல்லூரிகளுக்குத் தகுதியுள்ள மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்ய சட்டப்படி நமக்கு உரிமை உள்ளது. கல்வி இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை மாநில அதிகாரத்தின் பட்டியலில் உள்ளது. முன்பிருந்த அரசுகள் ஏனோ இதுபோன்ற சட்ட நுணுக்கத்தை நாம் பலமுறை சுட்டிக்காட்டியும், காதில் போட்டுக் கொள்ளாமலேயே ‘‘ஒப்புக்கு அழுதவர்கள்’’ ஆனார்கள்! எனவே, இந்தக் கோணத்திலும் நமக்குப் பனிரெண்டாம் மதிப்பெண் - தேர்வுமூலம் - சட்ட வலிமையைக் கூடுதலாக்கப் பயன்படும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, முதலாண்டு ‘நீட்’ தேர்வு விலக்கு நடைமுறைக்கு வந்ததால் என்ன கெட்டுப் போய்விட்டது? இந்தக் கொரோனா காலத்தில், ‘நீட்’ தேர்வை ரத்து செய்தால் வானம் இடிந்து விடுமா? ‘நீட்’ தேர்வுக் குழுவை அமைத்திருப்பதே அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளுக்கு முரண்பாடான நிலைப்பாடு என்பது மேலும் உரிய முறையில் எடுத்து வைத்து - அறிவு கொளுத்தி வாதாடவில்லை. இப்போது அது காலத்தின் கட்டாயமாகிவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல், மாணவர்கள் நலன், பாதுகாப்பை உறுதி செய்து - தேர்வை நடத்துவதும், அதன் அடிப்படையில் தொழிற்படிப்பு, பட்டப் படிப்புகளுக்கு நுழைவு வாயில் உருவாக்குவதும் கட்டாயம் என்பது நமது உறுதியான கருத்து, வேண்டுகோள். தமிழ்நாடு முதலமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், அத்துணைப் பேரும் ஆழ்ந்து இதனை பரிசீலிப்பார்களாக! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.