Show all

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரியில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 24 நாட்கள் இருக்கின்ற காரணத்தால், எந்தவிதமான முறைகேடுகளும் நடந்துவிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அந்த அடிப்படையில் கமல் ஒரு படிமேலே சென்று, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மூடிமுத்திரை வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன.

சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் தொகுதிவாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 72.78 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரப்பாடாக அறிவிக்கப்ப்ட்டு உள்ளது.

தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 24 நாட்கள் இருக்கின்ற காரணத்தால், எந்தவிதமான முறைகேடுகளும் நடந்துவிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 

இந்நிலையில்  கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் இன்று காலை திடீரென மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு மேற்கொண்டார். 

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அந்தக் கல்லூரிக்கு வந்த கமல்ஹாசன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஒன்றிய பாஜக அரசு, மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் பிடுங்கி, ஒன்றியத்தில் குவித்து கொண்டுள்ளதால், அரசு அதிகாரிகள் ஒன்றிய அரசின் அழுத்தங்களுக்கு பணிந்து, பாஜகவின் முறைகேடுகளை அங்கீகரித்து கமுக்கமாக பாதுகாப்பார்கள் என்ற அச்சம் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த அவலம், இந்தியாவில் இன்றைய தவிர்க்கவியலா நிலைப்பாடாக இருந்து கொண்டிருக்கிறது. 

பாஜகவிற்கு எதிர் நிலைப்பாடு உள்ளவைகளே, தற்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ஐந்து மாநிலங்களும் ஆகும். இந்த மாநிலங்களில் முறைகேடாக பாஜக வெற்றியை விதைத்து விடுமேயானால், பாஜகவுக்கு முறைகேடாக கிடைத்த சட்ட அங்கீகாரத்தை முறியடிப்பதில், எதிர்கட்சிகளால் ஒரு ஆணியும் பிடுங்க முடியாமல் போய்விடும். அதனாலேயே, தேர்தல் ஆணைய அதிகாரிகளை பாஜக முறைகேடுகளுக்கு முடுக்கிவிடாமல் இருக்க நமது விழிப்புணர்வைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர். அதில் கமல் இன்னும் ஒருபடி கூடுதலாகவே விழிப்பாய் இருக்கிறார் என்பதையே கமலின் இந்த நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது.

தேர்தல் ஆணைய அதிகாரிகளை- பாஜக முறைகேடுகளுக்கு முடுக்கிவிட ஆயத்தமாகுமேயானால், அதிகாரிகள் திமிரவே முடியாமல் வலுவாகவே பாஜகவின் பிடி இருக்கும் என்பதை இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சியினரும் தெளிவாக அனுபவித்து உணர்ந்து அறிந்திருக்கின்றார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.