நுரையீரலைத் தாக்கும் கொரோனா குறுவியிலிருந்து (வைரஸ்) தப்பிக்க தொண்டை மற்றும் மூச்சுப்பாதைகளை குறுவித் தொற்றில்லாமல் பாதுகாக்க பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகுவது, ஆவி பிடிப்பது, சூடான தண்ணீரை அவ்வப்போது அருந்துவது போன்ற முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. அதேவேளை, ஆவி பிடித்தல் நிகழ்ச்சியைப் பொது இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக நடைமுறைப்படுத்துவது பிழையானது என்று எச்சரிக்கப் படுகின்றது. 04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நோய்த்தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நுரையீரலைத் தாக்கும் கொரோனா குறுவியிலிருந்து (வைரஸ்) தப்பிக்க தொண்டை மற்றும் மூச்சுப்பாதைகளை குறுவித் தொற்றில்லாமல் பாதுகாக்க பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகுவது, ஆவி பிடிப்பது, சூடான தண்ணீரை அவ்வப்போது அருந்துவது போன்ற முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆவி பிடித்தல் நிகழ்ச்சியைப் பொது இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக நடைமுறைப்படுத்துவது என்பது பெருகி வருகிறது. நேற்று சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் பயணிகளுக்காக ஆவி பிடிக்கும் வசதியை காவல்துறையினர் அறிமுகப்படுத்தினார்கள். இதுபோன்று பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவி பிடிப்பதால் கொரோனா தொற்றுள்ளவரும் அதில் பங்கேற்க வாய்ப்புண்டு. அதனால் மற்றவர்களுக்கும் தொற்று அதிகரிக்குமே தவிர குறையாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர். இந்நிலையில் நேற்று லயோலா கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கொரோனா தொற்றைத் தவிர்க்க ஆவி பிடித்தல் சிகிச்சைக்கான பொது இடங்களில் ஆவி பிடிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என வலியுறுத்தினார். இவ்வாறு பொது இடங்களில் ஆவி பிடிக்கும்போது தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆவி பிடித்தால் அவர் நுகர்ந்து வெளிவரும் காற்றின் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அவருக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். அவர் ஆவி பிடித்த பின்னர் அதே இடத்தில் ஆவி பிடிப்பவருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல்தான். எனவே நுரையீரலைக் குறிவைத்துத் தாக்கும் குறுவியைப் (வைரஸை) பரப்ப நாமே காரணமாக இருந்துவிடக் கூடாது. எனவே பொது இடங்களில் இதுபோன்ற முனைப்புகளை முன்னெடுக்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சிறந்த மருத்துவர் ஆலோசனை பெற்று எதையும் செய்ய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.