கல்லூரி மாணவி இராசலெட்சுமி, தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நின்று நெற்பயிரை நடவு செய்து ஊர் மக்களின் பாரட்டிலும், பெற்றோர்கள் அன்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறார். 12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் இளவல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் இராசலெட்சுமி. கல்லூரியில் படித்து வந்தாலும் படிக்கிற நேரம் தவிர மற்ற நேரங்களில் தந்தைக்கு உதவியாக, இராசலெட்சுமி அவ்வப்போது வேளாண் பணிகளைச் செய்வார். இந்த நிலையில், இராசலெட்சுமியின் தந்தையார் கருப்பையன் தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி நெற்பயிர் நடவு செய்வதற்கான பணியைத் தொடங்கினார். நடவுப் பணியைச் செய்வதற்காக வேளாண் தொழிலாளர்களிடமும் சொல்லி வைத்திருந்தார். ஆனால், அவர்கள் வரவில்லை. பின்னர், தொடர்ந்து தேடியும் நடவுக்கு ஆள் கிடைக்கவில்லை. இதை கருப்பையன் தனது வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார். இதைக்கேட்ட இராசலெட்சுமி: ‘இதுக்கு ஏம்பா கவலைப்படுற நான் நடவு நடுகிறேன்’ எனக் கூறியுள்ளார். நடவுப் பணி செய்வது தன் மளுக்கும் தெரியும் என்றாலும் ஒரு ஏக்கர் வயலில் எப்படி நீ மட்டுமே நடவு செய்வாய், விளையாடாதம்மா’ என தன் மகளிடம் கருப்பையன் கூறியிருக்கிறார். ஆனாலும் இராசலெட்சுமி விடாப்பிடியாக பெற்றோர்களைச் சம்மதிக்க வைத்தார். இதையடுத்து, அப்பா நடவுக்கு உதவியாக இருக்க மகள் 3 நாள்களில் 1 ஏக்கர் நிலத்திலும் தனி ஆளாக நின்று நெற்பயிர்களை நடவு செய்யும் பணியை வெற்றிகரமாக செய்துமுடித்தார். இந்தத் தகவல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தெரியவந்ததும், உழவுத்தொழில் என்றாலே தலைதெறிக்க ஓடுபவர்களுக்கு நடுவே தனி ஆளாக நின்று நடவு செய்த இராசலெட்சுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து மாணவி இராசலெட்சுமி கூறியதாவது: நடவு செய்ய நாற்று எல்லாம் தயாராக இருந்த நிலையில், நடவுக்கு ஆட்கள் வரவில்லை. ஆள்பாற்றாக்குறை அடிக்கடி ஏற்படுகிறது. நாற்று விடுவது தொடங்கி நடவு நட்டு அதை வளர்த்து அறுவடை செய்வதற்குள் உழவர்கள் படும் சிரமத்துக்கு அளவே இல்லை. இந்த வேலை தெரிந்ததால் அந்தக் சிரமத்தை நான் நன்கு உணர்வேன். பயிர் தயாராக இருந்தும் நட முடியவில்லை என அப்பா கவலைப்பட்டதைப் பார்த்த பிறகு, ஏன் நாமே நடவு நட்டால் என்னவென்று தோன்றியது அதை அப்பாவிடம் கூறினேன். வேண்டாம்மா இது ஒரு ஆள் செய்கிற வேலை கிடையாது என்றவரை சம்மதிக்க வைத்து பணியில் இறங்கினேன். ஞாயிற்றுக் கிழமை காலை தொடங்கிய வேலையை மாலை வரை செய்தேன் ஆனால், ஒரு பகுதி மட்டுமே செய்ய முடிந்தது. இதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்கள் காலை கல்லூரிக்குச் சென்றுவிட்டு மதியம் வந்த பிறகு நடவுப் பணியைத் தொடங்குவேன். மூன்று நாள்களில் 1 ஏக்கர் நிலத்தையும் நட்டு முடித்தேன். அப்பா உடன் இருந்து மற்ற வேலைகளைச் செய்ததோடு உற்சாகமும் படுத்தினார். ‘இதே மாதிரி தன்னம்பிக்கையோடு இரு’ என அம்மாவும் அருகில் இருந்தவர்களும் பாராட்டி வாழ்த்தினர் என தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,196.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.