Show all

தமிழ்நாடு அறநிலையத்துறை அதிரடி! வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து மீட்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துக்கள் அனைத்தையும், வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்தது பலரது பாராட்டுகளையும் பெற்றது.

எல்காட் நிறுவனத்தின் உதவியோடு, சிதிலமடைந்த கோயில் ஆவணங்கள் செம்மைப்படுத்தப்பட்டு, கருப்புச்சங்கலி தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பாதுகாக்கப்படும் என்ற அறிவிப்பு முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்;சர் சேகர் பாபுவுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.

இந்த நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை சாலிகிராமம், காந்தி நகரில் தனியார் வாகனங்கள், கட்டுமானக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த 5.5 ஏக்கர் நிலம் தமிழக அரசால் இன்று மீட்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பதை தமிழ்நாடு அறநிலையத்துறை ஒரு போதும் அனுமதிக்காது. யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்” என்றார்.

மீட்கப்பட்ட இடத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேறுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஆலோசித்து அதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். 100 நாட்களுக்குள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். தமிழ்நாடு அறநிலையத் துறைக்கு வரவேண்டிய வருமானங்களை யார் மடைமாற்றம் செய்திருந்தாலும் அது சட்டப்படி மீட்டெடுக்கப்படும்” என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.