பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்தவர்களில் 231பேர்கள் உயிரிழந்துள்ளதாக அரசு இன்று வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது 26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் இரத்து செய்யப்பட்டது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர்களின் வருகைப்பதிவேடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 9,39,829 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய நிலையில், 4,71,759 மாணவர்களும், 4,68,070 மாணவியரும் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6,235 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், தேர்வெழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் குழப்பம் நிலவியது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப் போகிறவர்கள் என்பதாகத் தேர்வுத்துறை வெளியிட்ட விவரங்களின்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 9,45,006 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் தேர்வுத்துறை தெரிவித்துள்ள தகவல்களின்படி தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 939,829 என உள்ளது. மீதமுள்ள 5177 மாணவர்கள் என்ன ஆனார்கள்? என்று கேள்வி எழுந்த நிலையில், தமிழக அரசு விளக்கமான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வெழுத தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 9,45,077. அதில் 231 பேர்கள் தேர்வெழுத பதிவு செய்தபின்னர் இயற்கை எய்தியுள்ளனர் என்ற செய்தி வெளியாகி தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 658 பேர்கள் மாற்றுச்சான்றிதல் பெற்று பள்ளியை விட்டு நின்றுள்ளனர். 4359 பேர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஒரு பாடங்களை கூட எழுதவில்லை. எனவே, இந்த காரணங்களில் உள்ள 5248 பேர்களைக் கழித்து, 9,39,829 பேர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.