சென்னை விமான நிலையத்தில் கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்” என, ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அதற்கு நடுவண் தொழில் பாதுகாப்பு படை அதிகாரி, ‘தும் பாரதியாங் ஹைங்’ என, கேட்டுள்ளார். 26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை விமான நிலையத்தில், திமுக, மகளிரணி செயலர் கனிமொழி பாராளுமன்ற உறுப்பினரிடம், ‘தும் பாரதியாங் ஹைங்’ என கேட்ட, நடுவண் தொழில் பாதுகாப்பு படை அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். வேதியியில் மற்றும் உரத் துறைக்கான மக்களவை நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று மதியம், 1:50 மணி விமானத்தில், கனிமொழி டில்லி சென்றார். அப்போது, விமான நிலையத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, நடுவண் தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், ஹிந்தியில் பேசினார். அதற்கு கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்” என, ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி, ‘தும் பாரதியாங் ஹைங்’ என, கேட்டுள்ளார். இதுகுறித்து, கனிமொழி, கீச்சுப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விமான நிலையத்தில், நடுவண் தொழில் பாதுகாப்பு படை அதிகாரியிடம், எனக்கு ஹிந்தி தெரியாததால் தான், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டேன். அதற்கு அவர், ‘தும் பாரதியாங் ஹைங்’ என, என்னை பார்த்து கேட்கிறார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை, எப்போது உருவானது என்பதை, நான் அறிய விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். கனிமொழியின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முன்னாள் நடுவண் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாணிக் தாகூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர், கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நடுவண் தொழில் பாதுகாப்பு படை தரப்பில், கீச்சுப் பக்கத்தில் வெளியான பதிவில், 'விரும்பத்தகாத இந்த நிகழ்வு குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எந்த அதிகாரியிடமும், ஹிந்தியில் தான் பேச வேண்டும் என, எந்த உத்தரவும், எங்கள் தரப்பில் பிறப்பிக்கப்படவில்லை” என, கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு விமான நிலையத்திலும் குடியேற்ற அதிகாரிகள் விமானப் பயணிகளிடம் ஆய்வுக்காக கேள்வி கேட்பது வழக்கம். டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இந்தக் குடியேற்ற அதிகாரிகள் இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர் என்றால் ஆங்கிலத்தில் பேசவே மாட்டார்களாம். ஹிந்தியில்தாம் பேசி குறும்பு செய்வார்களாம். நாம் எதிர்த்துக் கேட்டால் ‘தும் பாரதியாங் ஹைங்’ என்று தேசியம் என்பது ஹிந்திக்கு அடிமையாய் இருப்பது என்பது போல நிறுவுவார்களாம். ஆனால் சென்னையில் குடியேற்ற அதிகாரிகள் யாரும் இந்த மாதிரியான குறும்புகளைச் செய்ய மாட்டார்கள். தமிழகப் பயணிகள் அவர்களுக்கு நிறைய சூடு போட்டு திருத்தி வைத்திருக்கிறார்கள் என்கின்றனர் நிறைய வெளிநாடு பயண அனுபவம் உள்ள தமிழர்கள். ஆனால் கனிமொழியிடம் குறும்பு செய்தவர் குடியேற்ற அதிகாரி அல்லர் நடுவண் தொழில் பாதுகாப்பு படை அதிகாரி என்று தெரியவருகிறது. இந்தப்படையை ஒப்பந்த அடிப்படையில் தமிழக அலுவலகங்களுக்கு ஏற்றுக் கொள்வதும் சம்பளம் வழங்குவதும் தமிழ்நாடு அரசுதான். இந்த அதிகாரிகளை தமிழக அரசு கண்டித்து வைக்கவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.