Show all

இன்னும் இருபத்தி மூன்று நாட்கள் என்னவெல்லாம் நடக்குமோ! வேளச்சேரியில் வாக்கு பதிவு இயந்திரங்களை பைக்கில் கடத்திய இருவர்

வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை பைக்கில் வைத்து எடுத்துச் சென்ற இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துiறியிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் முடிவுக்கு 24 நாட்கள் நம்மை காக்க வைத்திருக்கிற நிலையில், இந்தத் தேர்தலில் திமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த முறைகேட்டு நிகழ்வு தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரத்தை பைக்கில் கடத்த முயன்றதை பொதுமக்கள் பிடித்தனர். 

வாக்குப்பதிவு இயந்திரங்களை கடத்திய 2 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக்கோரி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நேற்று இரவு 7 மணியுடன் முடிவடைந்தது. 

பல இடங்களில் வாக்குப்பதிவு மையத்துக்குள் அதிமுகவினர் புகுந்து அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதேபோல், வேளச்சேரி தொகுதி வாக்குசாவடியை அதிமுகவினர் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டதாக நேற்று மாலை புகார் எழுந்தது. இந்தநிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் தரமணி நூறடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒரு விவிபேடு இயந்திரம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத 2 ஆட்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதை பின்னால் வந்த தனியார் உணவு கொண்டுதரும் ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார். இதையடுத்து, சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றவர்களை அந்த ஊழியர் வழிமறித்தார். 

ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டுசென்ற இரண்டு பேரும் அந்த ஊழியருக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்றனர். இதனால், சந்தேகம் அடைந்த அந்தஊழியர் வாக்குப்பதிவு இயந்திரத்தை கடத்துகிறார்கள் என சத்தமாக கூச்சலிட்டார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர், 2 பேரிடமும் இயந்திரத்தை எங்கே எடுத்துச்செல்கிறீர்கள் என கேட்டனர். 

நாங்கள் மாநகராட்சி ஊழியர்கள், வாக்குப்பதிவு மையத்தில் இருந்து தலைமை அலுவலகம் நோக்கி செல்கிறோம் என்று ஒருவர் கூறினார். இதுகுறித்து, வேளச்சேரி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதற்குள் வாக்குப்பதிவு இயந்திரம் கடத்தும் தகவல் தொகுதி முழுவதும் பரவியது. உடனே காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தனது ஆதரவாளர்களுடன் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார். அதற்குள் காவல்துறையினர், இரண்டு ஆட்களையும், வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல்நிலையத்திற்கு பறந்து விட்டனர்.
 
இதைபார்த்த, திமுக மற்றும் காங்கிரசார், வாக்குப்பதிவு இயந்திரம் கடத்தி வந்த ஆட்களை காப்பாற்றும் நோக்கில் காவல்துறையினர் ஈடுபடுவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே  தகவல் அறிந்த தேர்தல் பறக்கும்படை, மாநகராட்சி அதிகாரிகள் காவல்நிலையத்திற்கு சென்று பிடிபட்ட ஆட்களிடம் விசாரணை நடத்தினர். 

வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் மூடி முத்திரை வைத்து அவற்றைக் காவல்துறையினர் பாதுகாப்புடன் பெரிய வாகனங்களில் எடுத்துச்செல்வது தான் வழக்கம். ஆனால், இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துசென்றது ஏன் என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.  

இந்தநிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் கடத்தபட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று இரவு வேளச்சேரி-தரமணி முதன்மைச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதைத்தொடந்து, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசன் மவுலானா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜவினரின் வாக்கு இயந்திர முறைகேடு பெரிய அளவில் நடந்துகொண்டிருக்கிறது. எங்களின் உழைப்பை இப்படி குறுக்கு வழியில் பறித்துக் கொள்கின்றனர். நிகழ்வைக் கண்டித்த திமுக நிர்வாகியின் கையை காவல்துறை ஆய்வாளர் உடைத்துள்ளார். தேர்தலே கேள்விக்குறியாகிவிட்டது. எல்லா வாக்குப்பதிவு மையங்களிலும் அடாவடிகளைக் கையாண்டு வருகிறார்கள். எனவே, அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு பயம் ஏற்படும். மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.