ஒன்றிய பாஜக அரசின் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்” என்கிற தலைப்பில், இந்தியா முழுவதும் ஒரே குடும்ப அட்டையைப் பயன்படுத்தக்கூடிய திட்டம் தமிழகத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. 15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா முழுவதும் ஒரே குடும்ப அட்டையைப் பயன்படுத்தக்கூடிய திட்டம் தமிழகத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறது எடப்பாடியார் அரசு. ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்திற்கு ஒன்றியத்தின் வடக்கே ஆதரவும் தெற்கே எதிர்ப்பும் இருந்தது. ஆனாலும் முதன்மையான எதிர்ப்பை முன்னெடுத்த தமிழ்நாட்டிலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எடப்பாடியார் அரசு ஒப்புக் கொண்டு இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரும் செயல்பாட்டில் இறங்கியுள்ளது. இந்தத் திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய சில அம்சங்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதுமுள்ள 5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்படி, ஒரு குடும்பம் ஒரு குடும்ப அட்டையின் மூலம் இந்தியா முழுவதும் அரசு குறைந்த விலையில் வழங்கும் உணவு தானியங்களைப் பெற முடியும். வட இந்தியர்கள் கல்வி பெறுவதற்கோ தொழில் முனைவதற்கோ, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் போல, வட மாநிலங்களில் ஆளும் அரசுகள் உரிய வாய்ப்புகள் வழங்க முயலாத நிலையில், குறைந்த கூலி வேலைக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் நோக்கி இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு மாற்று நிவாரணம் வழங்கும் வகைக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. இந்த மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர், இந்த நான்கு மாநிலங்களில் அமைந்துள்ள நியாயவிலைக்கடை எதிலும் பொருட்களைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ்வரும் ஒரு மாநிலத்தின் பொது விநியோகத் திட்ட பயனாளர் தொகுப்பு, மையப்படுத்தப்பட்ட ஒரு சேவையகத்தில் இணைக்கப்படும். அதனால், ஒரே பயனாளி இரு மாநிலங்களில் குடும்ப அட்டையைப் பெற முடியாது. ஒரு மாநிலத்தில் பதிவுசெய்துள்ள பயனாளி, மற்றொரு மாநிலத்தில் உணவுப் பொருட்களைப் பெறும்போது, ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மட்டுமே உணவுப் பொருட்களைப் பெற முடியும். அதாவது அரிசி கிலோ மூன்று ரூபாய்க்கும் கோதுமை கிலோ ஐந்து ரூபாய்க்கும் பெற முடியும். அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களையோ, இலவச உணவு தானியங்களையோ பெற முடியாது. அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள், வழக்கம்போல உணவுப் பொருட்களைப் பெறலாம். தங்களுக்கான குடும்ப அட்டைப் பொருளை மாநிலத்தில் உள்ள எந்த ஒரு நியாயவிலைக் கடையிலும் பெற்றுக்கொள்ளலாம். சில அறைகூவல்களும் இருக்கின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நியாயவிலைக் கடைகளில் பிஓஎஸ் எந்திரம் மிக அவசியம். இந்தியாவில் தற்போது 77 விழுக்காட்டுக் கடைகளில் மட்டுமே இந்த எந்திரம் இருக்கிறது. புலம் பெயரும் தொழிலாளர்களை அதிகம் கொண்ட பிகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் மிகவும் பின்தங்கியுள்ளன. அதேபோல, எங்கிருந்து தொழிலாளர்கள் எங்கே புலம்பெயர்வார்கள் என்பதை கண்காணித்து அந்தப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் உணவு தானியங்களைக் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கேற்றபடி இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில உணவுக் கழகங்களின் செயல்பாடுகள் தீவிரமாக வேண்டியிருக்கும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு குடும்ப அட்டைகள் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 23 கோடி அட்டைகளில் இதுவரை 85 விழுக்காடு அட்டைகளே இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



