ஒன்றிய பாஜக அரசின் ஹிந்தி அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருப்பதை, கொரோனா தடுப்பூசி குறித்த கூட்டத்தில், திருச்சி சிவாவின் கவனஈர்ப்புக்குப் பலன் இல்லாமல் மோடி தொடர்ந்து ஹிந்தியிலேயே பேசியது உறுதிப்படுத்துவதாக உள்ளது. 20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சு தடுப்பூசி அடுத்த சில கிழமைகளில் கிடைக்கும் என்று தெரிவிப்பதற்கான கூட்டத்தில் இந்திய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி ஹிந்தியில் பேசினார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆன காணொளி கூட்டத்தில் நிறைவுறையாற்றிய தலைமைஅமைச்சர் மோடி ஹிந்தி மொழியில் பேசினார். அவர் பேசிய உரை சுமார் 12 நிமிடங்களுக்கு அமைந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள, தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திருச்சியில் உள்ள தனது வீட்டில் மடிக்கணினி மூலம் தயாராக இருந்தார். கட்சித் தலைவர்கள் அனைவரும் பேசிய பிறகு தலைமை அமைச்சர் மோடி ஹிந்தி மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது இடைமறித்த திருச்சி சிவா, ‘அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஹிந்தி மொழி தெரியாதவர்களும் உள்ளனர். அதனால் ஆங்கிலத்தில் பேசுங்கள். இல்லையென்றால் உரையின் உள்ளடக்கத்தை ஆங்கிலத்திலாவது வழங்குங்கள்’ என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் சில நொடிகள் மௌனமாக இருந்த தலைமைஅமைச்சர் மோடி பிறகு தனது பேச்சை ஹிந்தியிலேயே தொடர்ந்து நிறைவு செய்தார். தமிழகத்தை பொறுத்தவரை, அனைத்து இந்திய அளவிலான கூட்டங்களில் ஹிந்தி மொழியில் தலைவர்களோ, உயரதிகாரிகளோ உரை நிகழ்த்துவதற்கு தொடர்ந்து திமுக, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றிய அமைச்சர்கள் அனுப்பும் மடல் ஹிந்தி மொழியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி தனது உரிமையைப் பதிவுசெய்தார். இதற்கு முன்னதாக, மூன்று மாதங்களுக்கு முன்பு ஹிந்தி நாளை முன்னிட்டு உள்துறை அமைச்சர் கீச்சு மற்றும் காணொளிப் பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில், ஹிந்திதான் பல நூற்றாண்டுகளாக இந்த தேசத்தை இணைத்து வருகிறது. உள்ளூர் மொழிகளுடன் ஹிந்தியையும் வளர்க்க வேண்டும் என்றும் அமித்சா கூறியிருந்தார். அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்சா, ஹிந்தி மொழி இந்தியாவை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி இருக்கிறார். பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், ‘வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் ஒன்றாகத்தான் ஹிந்தி இருக்கிறது என்பதை அமித்சா உணர வேண்டும்!’ என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைஅமைச்சர் மோடி ஹிந்தியில் பேசியதற்கு திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்திருப்பது மீண்டும் ஹிந்தி திணிப்பு செய்வதாக திமுக முன்னெடுத்து வரும் முழக்கத்துக்கு உயிர் கொடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அரசியல் தளங்களுக்கு வெளியே, ஆயுஷ் காணொளி கூட்டமொன்றில் ஹிந்தி மொழியில் அத்துறை செயலாளர் பேசிய முன்னெடுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்களை அந்த துறைச்செயலாளர் அறையை விட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அந்த முன்னெடுப்பிலும் திமுக தனது எதிர்ப்பை தெரிவித்தது. இதேபோல, சென்னை விமான நிலையத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் பணியில் இருந்த பெண் காவலர் ஹிந்தியில் பேசியதால் அவரிடம் ஆங்கிலத்தில் பேச முடியுமா என கேட்டதற்கு ‘தும் பாரதியாங் ஹைங்’ என்று கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நிகழ்வை தனது கீச்சுவில் குறிப்பிட்டிருந்த கனிமொழி, ‘இந்தியனாக இருக்க ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என அளவுகோல் எப்போதில் இருந்து நடைமுறையில் இருக்கிறது’ என்று கேட்டு தனது வெறுப்பைப் பதிவு செய்திருந்தார். இவற்றின் தொடர்ச்சியாகவே திருச்சி சிவாவின் கவனஈர்ப்புக்கும் பலன் இல்லாமல், ஹிந்தி ஆதிக்கம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



