24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வு கடந்த ஆண்டுதான் தொடங்கியது. மருத்துவக் கல்விக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக, நடுவண் அரசு தான் உரிமை யெடுத்துக் கொண்டு நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தை இந்த வேலைக்கு அழைத்திருக்கிறது. சரி! இந்தத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களால் தான் மருத்துவக் கல்வி பயில முடியுமா? அப்படியெல்லாம் இல்லை. மருத்துவப் படிப்புக்கு மட்டுமல்ல எந்த இளவல் பட்டப் படிப்புகளுக்கும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அவ்வளவுதான். 12ஆம் தேர்ச்சி பெற்ற எவருமே எந்த இளவல் பட்டப் படிப்பிலும் சேர்ந்து பயில தகுதியானவர்களே. அப்படியானால் தமிழகத்திலிருந்து இலட்சத்திற்கு மேலானவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கிறார்களே அத்தனை பேருக்கும் வாய்ப்பு அளித்தால் மருத்துவர்களாக தேர்ச்சி பெற முடியுமா? முடியும். அப்புறம் எதற்கு இத்தனை தேர்வு முறை கெடுபிடி யெல்லாம்? அரசால் அத்தனை பேருக்கும் இடம் தர முடியாது என்பதுதான் உண்மை. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரில் இவர் தகுதியானவர் இவர் தகுதியில்லாவர் என்று யாராலும் கணித்துக் கூற முடியாது. எந்தக் கருவியும் கிடையாது. என்னிடம் இத்தனை பேருக்குத்தான் இடம் இருக்கிறது. எனக்கு இத்தனை பேர்தான் தேவை. அத்தனை பேரை இந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறேன் என்று தமிழக அரசு, போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் நியாயம் என்று ஒப்புக் கொள்கிற மாதிரியான ஒரு அடிப்படையை வைத்துக் கொள்ளலாம். இதிலே நடுவண் அரசு குறுக்கே பாய்ந்து குட்டையைக் குளப்ப வேண்டிய தேவையெல்லாம் எதுவுமேயில்லை. போட்டியில் கலந்து கொள்கிறவர்களே நியாயம் இல்லை என்று சொல்லுகிற கெடுபிடிகளை கடைபிடிக்க வேண்டிய தேவை யெதுவுமே யில்லை. ஒரு கோடி பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டால் என்ன செய்வார்கள்? திரைப்படம், பேருந்துபயணம், தொடர்வண்டிப் பயணம் சீட்டு கொடுப்பது போல முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பார்கள். அவ்வளவுதான். அடப்பாவிகளா! போங்கடா நீங்களும் ஒங்க நீட்டும் என்கிறீர்களா? ஆம்! உண்மைதான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,780.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.