25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த இன்று கடைசி நாளாக அறிவித்து 'ஸ்கீம்' ஒன்றை (வரைவு செயல்திட்டம்) பதிகை செய்யுமாறு நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக நடுவண் அரசின் சார்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நேற்று ஒரு பிரமாண பத்திரம் பதிகை செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: காவிரிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. உச்சஅறங்கூற்றுமன்றம் கடந்த முறை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதிகை செய்வதற்காக, காவிரிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டம் நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தயாராக இருந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 23-ந் தேதி கர்நாடகா முதல்வரிடம் இருந்து இந்தியத் தலைமை அமைச்சருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டு இருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனென்றால் அது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இல்லை. மேலும் இந்த வாரியம் தொடர்பான இயங்குமுறை எதையும் உச்சஅறங்கூற்றுமன்றம் வரையறுக்கவில்லை. காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பரிந்துரை தான் செய்துள்ளதே தவிர உத்தரவாக கூறவில்லை. பிப்ரவரி 16-ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவில் காவிரி நடுவர் மன்றத்தின் பரிந்துரையை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சஅறங்கூற்றுமன்றம் அதை சிறிது மாற்றங்களுடன் ஏற்றுக் கொண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான தேவை ஏதுமில்லை. உண்மை நிலவரத்தின் அடிப்படையிலும், பிலிகுண்டுலு பகுதியில் இருந்து சாதாரண ஆண்டில் தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதற்கு உத்தரவு பிறப்பித்த நிலையிலும் இது போன்ற உத்தரவு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மேலும் காவிரி தண்ணீர் மீது கர்நாடக மாநிலத்துக்கு உள்ள உரிமைக்கு எதிரானதும் ஆகும். மேற்கண்டவாறு கர்நாடக முதல்வரின் கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. (நம்ம எடப்பாடி-பன்னீர் கூட நீட் தேர்வு தேவையேயல்லை என்று கடிதம் எழுதி தடுத்திருக்கலாம் போல இருக்கிறதே) இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு வரைவு செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்த வரைவு செயல்திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் கோரப்படுகிறது. இவ்வாறு நடுவண் அரசின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது. நடுவண் அரசு கர்நாடகவின் கோரிக்கைக்கு உண்மையிலேயே மதிப்பு அளிக்கிறதா? இல்லை மதிப்பளிப்பது போல் நடித்;;;துக் கொண்டிருக்கிறதா என்பது கர்நாடகா தேர்தல் முடிந்தால் தான் கண்டுபிடிக்க முடியும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,781.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.