Show all

தமிழக அமைச்சரவையில் முடிவு! ஊரடங்கை தொடரலாம் என்றும், தலைமைஅமைச்சர் எடுக்கும் முடிவை அமல்படுத்துவது என்றும்

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தலைமைஅமைச்சர் வெளியிடும் அறிவிப்பை தமிழக அரசு அமல்படுத்தும் என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமைஅமைச்சர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற செவ்வாய்க் கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு சில மாநில அரசுகள் தலைமைஅமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே, ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கும் என்று அறிவித்துள்ளன.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள கடுமையான சிக்கல்கள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் தலைமைஅமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இதில் முதல்வர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில், முடக்கத்தை நீட்டிப்பது பற்றிய இறுதி முடிவை நாளையோ, நாளை மறுநாளோ நடுவண் அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற செவ்வாய்க் கிழமையோடு ஒட்டுமொத்தமாக ஊரடங்கை நீக்கிவிட முடியாது என தலைமைஅமைச்சர் ஏற்கனவே கூறி இருப்பதால், ஒரு சில பகுதிகளில் அல்லது குறிப்பிட்ட சில மணி நேரம் ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

மேலும் 2 கிழமைகள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில விலக்குகள் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தலைமைஅமைச்சர் எடுக்கும் முடிவை தமிழக அரசு அமல்படுத்துவது என்று அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.