பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள தங்களது உள்கட்டமைப்பு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறங்கூற்றுமன்றத்தினை அணுகியுள்ளது. 21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின், குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு ஆதாயமளிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாற்பத்தி ஒன்றாவது நாளாக உழவர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நடுவே ஜியோவின் பல தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஜியோ தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில் இந்த வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதாக உழவர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் கார்ப்பரேட் ஒப்பந்த வேளாண்மையில் ஈடுபடும் திட்டம் தங்களுக்கு இல்லை என்றும், எந்த வேளாண் நிலத்தையும் வாங்குவதாக இல்லை என்றும் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் உணவுப் பொருட்களை உழவர்களிடமிருந்து, நேரடியாகக் கொள்முதல் செய்வதில்லை. குறைந்தபட்ச ஆதார விலை என்பதை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு எங்கள் சப்ளையர்களுக்கு திட்டவட்டமாக அறிவுறுத்தியிருக்கிறோம் என கூறியுள்ளது. இந்த நிலையில் தான் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள தங்களது உள்கட்டமைப்பு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறங்கூற்றுமன்றத்தினை அணுகியுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களில் இந்த நிறுவனத்தின் பங்கும் இருப்பதாக, கோபமடைந்த உழவர்கள் இந்தச் சேதத்தினை செய்துள்ளனர். குறிப்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிலத்தடி கம்பிவடத்தைச் சேதப்படுத்தியும், உள்கட்டமைப்புகளை சேதப்படித்தியும் தங்களது கோபத்தினை காட்டியுள்ளனர். இந்த வேளாண் சட்டங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தையே ஒரு முதன்மைப் பயனாளியாக ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகளின் தொடர் அனுபவத்தின் அடிப்;;படையில் கருதுகின்றனர். இந்த நிலையில் தான் இப்படி ஒரு சேதம் விளைவித்துள்ளனர். இதற்கு தனது பதிலை அளிக்கும் விதமாக, ஒப்பந்த வேளாண்மையில் விருப்பமில்லை அதோடு உழவர்களுக்கு அதிகாரம் வழங்குவதில் ரிலையன்ஸ் கவனம் செலுத்தும் என கூறியுள்ளது. பஞ்சாபில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோவுக்குச் சொந்தமான 9,000 செல்பேசி கோபுரங்களில் 1,500 கோபுரங்கள் தாக்கப்பட்டுள்ளன. தனக்கு ஒரு கண் போனால் தனது போட்டியாளர்களுக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்கிற கதையாக, இந்த தாக்குதலின் பின்னணியில், சில வர்த்தகப் போட்டி நிறுவனங்களும் இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறைச் செயல்களினால் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து விளைந்துள்ளது. முதன்மையாக தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இதன் துணை நிறுவனங்களின் சேவை மையங்கள் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பெரிய அளவில் இடையூறுக்கு ஆளாகியுள்ளன என்று கூறியுள்ளது. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டோருக்கு தக்க தண்டனை வழங்கவும் இனி வன்முறையில் ஈடுபடாதவாறு அச்சுறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள அரசு தலையீடு கட்டாயம் என்றும் கோரி பஞ்சாப், ஹரியானா உயர் அறங்கூற்றுமன்றங்களில் வழக்கு தொடரப்போவதாக ரிலையன்ஸ் ஜியோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.