Show all

கடும் குளிர் மழைக்கு 60 பேர் மரணம்! டெல்லியில் நாற்பது நாட்களாக போராடும் உழவர்கள்

ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் உழவர்களில், ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு உழவர் மரணம் அடைவதாக உழவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் உழவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்திருப்பதாக பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு உழவர் மரணம் அடைவதாக உழவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. 

ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களின் உழவர்கள் முப்பத்தி ஒன்பது நாட்களுக்கு முன்பு டெல்லியை நோக்கி படையெடுத்தனர். காவல்துறையினரின் தடைகளை மீறி முன்னேறிச் சென்ற உழவர்கள், டெல்லியின் புராரி திடலில் முகாமிட்டனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ஒரு ஆண்டு ஆனாலும் இந்தப் போராட்டம் ஓயாது என்று திட்டவட்டமாக தெரிவித்த உழவர்கள், தொடர்ந்து 40ஆவது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

கடும் குளிர் பனி மூட்டம் நிலவி வருகிறது. சாலைகளில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு ட்ராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கிக் கொண்டு உழவர்கள் போராடி வருகின்றனர். இது வரை ஏழு முறை கலந்துரையாடல் என்ற தலைப்பல் உழவர்களை அழைத்து, போராட்டத்தை விலக்கிக் கொள்ள பாடமெடுத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

இதானால் விரக்;தி அடைந்த உழவர்கள், வேளாண் சட்டங்களை நீக்குவது மட்டுமே தீர்வு. இனி அரசின் கலந்துரையாடல் அழைப்பில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். 

போராடும் உழவர்களுக்கு, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு வேளாண் அமைப்புகள், மற்றும் பிற அமைப்புகள் சார்பில் உணவு, படுக்கை, கூடாரம் உள்ளிட்ட, பலதரப்பட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் போரட்டத்திற்கு ஆதரவும் அதிகரித்து வருகின்றது.

உழவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மட்டுமே ஒன்றிய பாஜக அரசு வற்புறுத்தி வருகிறது. அதை ஏற்க மறுத்து உழவர்கள் வேளாண் சட்டத்தை நீக்கம் செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கூறி போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளனர். 

எதிர்வரும் குடியரசு நாளன்று டெல்லியில் மிகப்பெரிய ட்ராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும் உழவர்கள் எச்சரித்துள்ளனர். டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகின்றது. இதனை பொருட்படுத்தாமல் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது மழை பெய்யத் தொடங்கி உள்ளது. டெல்லி மற்றும் நொய்டா எல்லைகளை இணைக்கும் சில்லா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உழவர்கள், மழைப்பொழிவில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

எது வந்தாலும் எதிர்கொள்வோம் பனி, மழை என எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை எதிர் கொண்டு தங்களை தற்காத்துக் கொள்வோம் என்றும், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், டெல்லி போராட்டத்தில் ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு உழவர் உயிரிழப்பதாக பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிலவும் கடும் குளிராலும் மாரடைப்பாலும் இதுவரை 60 உழவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் கோரிக்கையை பரிசீலனை செய்யவில்லை என்றால் போராட்டம் தீவிரமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.