06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே உள்ள ராம்கர் என்ற கிராமத்தில் இரண்டு பசு மாடுகளுடன் வந்த இளைஞர்கள் இருவரை ஒரு கும்பல் வெள்ளிக்கிழமை வழிமறித்துள்ளது. பசு மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றால் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் அந்தக் கும்பலிடம் இருந்து தப்பியோடினார். இதையடுத்து மற்றொரு இளைஞரான அக்பர்கானை அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியது. அக்பர்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பசுக்குண்டர்களுக்கு எதிராக தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச அறங்கூற்றுமன்றம் கடந்த வாரம் கடுமையாக தீர்ப்பளித்திருந்த நிலையிலும் கூட இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆல்வரில் முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் அவரின் கீச்சு தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், உண்மைக்கு ஆதரவாக இருக்காமல், வகுப்புவாத வன்முறைகள் பல இடங்களில் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். பசுவை கடத்திச் செல்கிறார் என நினைத்து ஆல்வார் அருகே ஒரு முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது. ஆனால், பாஜகவினரோ அப்பாவிகளை அடித்துக் கொல்லும் நிகழ்வுகள் குறைந்து விட்டதாகக் கூறுகிறார்கள். இதைப் பார்க்கும் போது, ஒரு முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பு என்று தெரிவித்து பாஜக ஆட்சியாளர்களின் அடாவடிகளின் மீதான கோபத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், தி பிரிண்ட் எனும் தளத்தில் சசி தரூர் பசுகுண்டர்களால் நடத்தப்படும் வன்முறை குறித்துக் கட்டுரை எழுதியுள்ளார். அதையும் தனது கீச்சு பக்கத்தில் இணைத்துள்ளார். அதில் கடந்த 8 ஆண்டுகளில் பசு தொடர்பான வன்முறைகளால் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 98 விழுக்காடு வழக்குகள் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் பதிவு செய்யப்பட்டவை, பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்தவையாகும். இந்தத் தாக்குதலில் 136 பேர் தாக்கப்பட்டுள்ளனர், 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் 86 விழுக்காடு பேர் முஸ்லிம்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,856.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



