Show all

வணக்கம்! “போக்கிரி விகாஸ் துபேயும் இரண்டு மாநிலக் காவல்துறையினரும்” வெள்ளிக்கிழமைக் தொடங்கிய நேரலை வெள்ளிக்கிழமை முடிந்தது

மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் வழியில் வாகனம் கவிழ்ந்ததால் தப்பி ஓட முயன்ற போக்கிரி விகாஸ் துபேயை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதால், “போக்கிரி விகாஸ் துபேயும் இரண்டு மாநிலக் காவல்துறையினரும்” வெள்ளிக்கிழமைக் தொடங்கிய நேரலை வெள்ளிக்கிழமை முடிந்தது

26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அறுபதுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பேரறிமுகப் போக்கிரி விகாஸ் துபேயை கைது செய்வதற்காக,  கடந்த வெள்ளிக் கிழமை கான்பூர் அருகில் உள்ள பிக்ரு கிராமத்திற்கு காவலர்கள் சென்றிருந்தபோது போக்கிரி விகாஸ் துபேயின் கூட்டாளிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், காவல்துறை தரப்பில் மாவட்டக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட எட்டு காவல்துறையினர் உயிரிழந்தனர். போக்கிரிகள் தரப்பில் இருவர் இறந்தனர். 

தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக இருபது காவல்துறைக் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காவல்துறையினர் முடுக்கப்பட்டனர். இதனால், விகாஸ் துபே அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாக இருந்தான். 

விகாஸ் துபே தேடுதல் வேட்டையில், விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்று காலை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் விகாஸ் துபே சிக்கினான். உஜ்ஜைன் மகாகாளி கோவிலுக்கு முகமூடி அணிந்து சென்றபோது அவனைப் பார்த்த கடைக்காரர் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் கோவிலில் இருந்து வெளியேறிய விகாஸ் துபேயை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

விசாரணைக்குப் பின்னர் உத்தர பிரதேச போலீசில் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான். அவனை உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார், இன்று பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு கொண்டு வந்தனர்.

கான்பூரை நெருங்கியபோது அவர்கள் வந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் காவல்துறையினர் அனைவரும் அந்த வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி போக்கிரி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான். அவனைக் காவலர்கள் சுட்டுப் பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த விகாஸ் துபே சிறிது நேரத்தில் உயிரிழந்தான். இவ்வாறு உத்தரப்பிரதேசக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தை பயன்படுத்தி காவல்துறையினரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து தப்பிக்க முயன்றதாகவும் அதனால் சுட்டுத்தள்ளல் (என்கவுன்டர்) நடவடிக்கை மேற்கொண்டதாகவும் கான்பூர் காவல்துறை தலைவர் கூறினார். காரில் இருந்த 4 காவலர்கள் காயமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.