08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் பிரதிநிதியையும் நடுவண் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஒழுங்காற்று குழுவையும் நடுவண் அரசு அமைத்துள்ளது. உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அரசிதழில் நடுவண் அரசு வெளியிட்டது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினரை கர்நாடகா அரசு அறிவிக்காமல் இழுத்தடித்தது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களை நடுவண் அரசு இன்று அறிவித்தது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். கர்நாடகா உறுப்பினரை அறிவிக்காததால் அம்மாநில நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் பகுதி நேர உறுப்பினராக இருப்பார் எனவும் நடுவண் அரசு அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா பிரதிநிதிகள் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படும். இதேபோல் மத்திய நீர்வள ஆணைய பொறியாளர் நவீன் தலைமையில் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்காற்று குழுவில் தமிழக அதிகாரிகள் செந்தில், கிருஷ்ண உன்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளார். கேரளாவின் ஜோஷி, புதுச்சேரியின் சண்முகசுந்தரம் ஆகியோரும் உறுப்பினர்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றனர். ஆனால் கர்நாடகா உறுப்பினர் இடம்பெறவில்லை. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமையும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,826.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



