சென்னையில் வசிக்கும் மக்களின் சார்பாய், கேரளா மாணவி மோகனா சாஜன் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குவோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்று கேரளாவை சேர்ந்த அந்த மாணவி நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளார். 21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்று கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளார். நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதனை தடுக்க சட்டப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறையவில்லை என்ற கவலை தொடர்கிறது. இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்று கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மோகனா சாஜன். சென்னையில் உள்ள கல்லூரியில் கலை முதுவர் பட்ட வகுப்பு படித்து வருகிறார். அவர் சென்னையில் தங்கியிருக்கும் கேரள பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினார். இதற்காக அவர் சென்னையில் தங்கி படிக்கும் கேரள மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களைச் சந்தித்து கருத்து கேட்டு தனது ஆய்வு முடிவில் பதிவு செய்துள்ளார். மாணவி நடத்திய அந்த ஆய்வின் முடிவை ஐ.ஐ.டி. பாம்போ என்ற நிறுவனம் வெளியிட்டு உள்ளது. பெண்களை மதிப்பதும், பாதுகாப்பதும் சென்னை நகரை போன்று வேறு எந்த நகரமும் இல்லை. அதே போல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக குறைந்த நகரம். இரவு 7 மணி போல்தான், இரவு 10 மணியும் உள்ளது. எந்த நேரத்திலும் இங்கு பெண்கள் நடமாடலாம். சென்னையில் தங்கி வேலை செய்யும் மலையாள பெண்கள் வேலை காரணமாக இரவு 10 முதல் 11 மணி ஆனாலும் தொடர்வண்டி, பேருந்து, தானி உள்ளிட்ட வாகனங்களிலோ அல்லது நடந்தோ தைரியமாக வீடுகளுக்கு வரலாம். பேருந்து மற்றும் தொடர்வண்டிப் பயணங்களில் ஆண்களால் இதுவரை வேதனை அடைந்தது இல்லை. சிலர் கிண்டல் செய்வது போல் பார்ப்பார்கள். இருந்தாலும் நமது பார்வை சரியாக இருந்தால் அப்படி பார்ப்பவர்களும் கூட ஒதுங்கி சென்றுவிடுவார்கள். பேருந்துப் பயணத்தில் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்திருந்தால், பெண்கள் வந்தால் எழுந்து சென்று அமர இடம் கொடுக்கிறார்கள். உடல்களில் யாராவது கை வைப்பதோ, தவறாக பேசியதோ இதுவரை எங்களுக்கு நடக்கவில்லை. கேரளாவை விட சென்னை நூறு விழுக்காடு பாதுகாப்பாக உள்ளது. அதேபோல் சென்னையில் உள்ளவர்களை பார்த்து மரியாதை கொடுப்பதையும் கற்றுக்கொள்ளலாம். இங்கு உள்ளவர்கள் அகவை வேறுபாடு பார்க்காமல் வாங்கள், போங்கள் என்றுதான் பேசுவார்கள். ஆனால் எங்கு பார்த்தாலும் சத்தமாகத்தான் இருக்கும். தேநீர்க் கடை, பெட்டிக்கடை, சந்தை என எங்கு பார்த்தாலும் பெண்கள் சத்தமாகவும், மகிழ்வோடும் பேசுவார்கள். வசதி இல்லாதவர்களும் இங்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். மேற்கண்ட தகவல்கள் அதில் கூறப்பட்டுள்ளன. தனது ஆய்வு குறித்து மாணவி மோகனா சாஜன் கூறியிருப்பதாவது:- தமிழ் மக்களிடம் மிகவும் மகிழ்ச்சியான மனநிலை உள்ளது. அவர்கள் கோபத்தை மனதில் வைத்திருக்கமாட்டார்கள். பேச வேண்டியதை உடனே பேசி தீர்ப்பார்கள். ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக உள்ளேன் என்பதை விட வேறு ஒன்றும் தேவை இல்லை. அது சென்னை பெண்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சென்னையில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த ஆசிரியை மேரி குட்டி பிரான்சிஸ் கூறியதாவது:- ஆண்களுக்கு இணையாக மரியாதை, உரிமையை பெண்களுக்கு கொடுப்பது சென்னையை போல் வேறு எங்கும் இல்லை. தொடர்வண்டி மற்றும் பேருந்துகளில் பெண்களைக் கண்டால் ஆண்கள் எழுந்து செல்கிறார்கள். நான் பாதுகாப்பாக இல்லை என்றும், ஆண்களால் பாதிக்கப்பட்டேன் எனவும் சென்னையில் ஒரு பெண்கூட கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



