ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்திருக்கும், கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் பரவலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம். போராட்டத்தில் மோடி உருவபொம்மையை எரித்தனர். ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்திருக்கும், கருப்பு வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் டெல்லியில் பதினொன்றாவது நாளாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உழவர்களுக்கு ஆதரவாகவும், 3 கருப்பு வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற கோரியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகை மாலி தலைமை தாங்கினார். இதில் உழவர் சங்க மாநில தலைவர் சுப்ரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகையன், வேளாண் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன், வேளாண் சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி முழக்கங்கள் எழுப்பினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமைஅமைச்சர் மோடியின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்து கீழையூரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர் பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். நாகை தலைமை அஞ்சல் நிலையத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பகு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சரபோஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர். உழவர்களுக்கு எதிரானதும் கருப்புச் சட்டமுமான வேளாண் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும். வேளாண்துறையைக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடி கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வேளாண் சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில் உழவுத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சந்திரசேகர், வேளாண் சங்க ஒன்றிய செயலாளர் முத்தையன், மாவட்ட குழு உறுப்பினர் அபூபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்திருக்கும், கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வேளாங்கண்ணி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மோடி உருவபொம்மையை எரித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



