பெங்களூரில், தமிழில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. ஆடி கிருத்திகை மற்றும் விடுதலை நாளையொட்டி பெங்களூரில் உள்ள புலகேஷிநகரில், தமிழில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பதாகைகளை இன்று காலை கர்நாடகா ரக்ஷண வேதிக் உறுப்பினர்கள் சிலர் கிழித்து எறிந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது. நேற்று விடுதலைநாள் விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘கர்நாடகாவில் கன்னட மொழிதான் முதன்மையானது. கர்நாடகாவில் கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்துக்கொள்ள முடியாது’ என்று கன்னட மொழி குறித்துப் பேசினார். இந்நிலையில் பெங்களூரில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடகா ரக்ஷண வேதிக் உறுப்பினர்கள் தமிழ்ப் பதாகைகளைக் கிழித்ததன் நோக்கம் என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



