நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு, வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசுகிறார். என்னையும் மனநிலை சரியில்லாதவன் என்று கூறுகிறார். கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை 22 ஆண்டுகளுக்கு முன்பே நானும், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரும் எதிர்த்தோம். இந்தத் திட்டத்தால் அதனை சுற்றியுள்ள 6 மாவட்டங்கள் அழிந்து விடும். இந்தத் திட்டத்தை எதிர்த்து போராடிய திருமுருகன் காந்தி, பேராசிரியர் ஜெயராமன், மாணவி வளர்மதி உள்ளிட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இது ஜனநாயக ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா? ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கடைசி வரையிலும் போராடுவேன். இதற்காக அறங்கூற்று மன்றத்தில் நேரில் அணியமாகி வாதாடுவேன். கிராமப்புற, நடுத்தர மாணவர்கள் நீட் தேர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வில் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்காமல், முழுமையான விலக்கு அளிக்க வேண்டும். ஒரே இந்தியா, ஒரே மொழி என்று நடுவண் பா.ஜ.க. அரசு முழக்கம் செய்கிறது. இதுதொடர்ந்தால் இந்தியா பிளவுபட்டு விடும். தஞ்சாவூரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15 அன்று அண்ணா பிறந்தநாளில் ம.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இதனால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். இதில் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு வைகோ அவர்கள் நடுவண் அரசுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



