06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மூலம், எதிர்கட்சிகளுக்கு ஆளும் கட்சியின் ஆட்சி அவலங்களை தெளிவாக எடுத்துரைக்க நல்லதொரு வாய்ப்பு கிட்டியது. அதுவும் ராகுல் காந்தி மிகச்சிறப்பாக தனது வாதத்தை வைத்தார் என்று உலகளாவி பராராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். வாக்கெடுப்புக்கு பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் மோடியின் இருக்கையை நோக்கி சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியைக் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது. மேலும், பாஜகவினர் பலரும் ராகுலின் செயலால் அதிருப்தி அடைந்து இவ்விவகாரத்தை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் மோடி தன்னை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ராகுல், மோடியைத் திடீரென கட்டித் தழுவியிருக்கக் கூடாது. இதனால், பாராளுமன்றத்தில் இந்தியத் தலைமை அமைச்சருக்கான பாதுகாப்பை பற்றி என்ன கூறுவது? ராகுல் செய்தது முற்றிலும் நெறிமுறையற்ற செயல், இதனை ஊக்குவிக்கவும் கூடாது, இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறவும் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். ராகுல், மோடியைத் திடீரென கட்டித் தழுவியதால், அதிர்ச்சியில் மோடி உடல் நலம் பாதிக்கப் பட்டிருப்பாரா என்ன? அவ்வளவு பயமா மோடிக்கு எதிர்கட்சிகள் மீது? ராகுல் சொல்லுவது போல மோடி யார் கண்ணையும் பார்த்து பேச அஞ்சுவது உண்மைதானா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,856.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



