Show all

இன்னும் புயல், மழை, வெள்ளம் மாதிரி 9திட்டம் இருக்காம்! சேலம்-சென்னை 8 வழிச்சாலை வெறும் தூவனம் தானாம்

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் நாட்டில் 10,000 கோடி ரூபாய் செலவில் சேலம் - சென்னை இடையிலான 8வழி சாலை அமைப்பதன் மூலம் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று உழவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. 

சேலம் சென்னை சாலை திட்டத்தை போலவே தமிழ்நாட்டில் இன்னும் 8 திட்டங்கள் வர இருப்பதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை - சேலம் வழிச்சாலை போன்றே பிற 8 திட்டங்களிலும் வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இத்திட்டங்களால் தமிழ்நாட்டின் போக்குவரத்து மேம்படும் என்றாலும், வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட உள்ளது மிக தெளிவாக தெரிகிறது. 

இந்தத் திட்டங்கள் அனைத்தும் நடுவண் அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் வர இருப்பதாகவும் 570 கிலோ மீட்டர் தொலைவிற்குச் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் இந்தச் சாலைகளை அமைக்கப் ஐந்து மாதங்களுக்கு முன்னமேயே 43,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நித்தின் கட்காரி உட்பட மேலும் சில நடுவண் அமைச்சர்களைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. 

சென்னை - சேலம் வழிச்சாலை உட்பட இந்த 9 திட்டங்களுக்கும் இந்தச் சந்திப்புகளின் போதே அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளனவாம். 

திட்டம் ஒன்று அனைவருக்கும் தெரிந்தது தான். சென்னை - சேலம் வழிச்சாலை. 

திட்டம் 2 கரூர் - கோயம்புத்தூர் இடையிலான நெடுஞ்சாலை திட்டம். திட்டம் 3 ரூ1,919 கோடி ரூபாய் செலவில் மேலூர் - திருப்பத்தூர் - புதுக்கோட்டை - தஞ்சாவூர் இடையிலான 4 வழி சாலை திட்டம். 

திட்டம் 4 கும்பகோணம் -சீர்காழி இடையிலான சாலை திட்டம். 

திட்டம் 5 மகாபலிபுரம் - புதுச்சேரி சாலை திட்டம். 

திட்டம் 6 ஒட்டன்சத்திரம் - கமலாபுரம் (திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் - பொள்ளாச்சி நீட்சி) சாலை 

திட்டம் 7 மதுரை - தனுஷ்கோடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம் மற்றும் பாம்பனில் கூடுதல் பாலம். நிலஅளவைப் பணிகள் தொடங்கிவிட்டன. 

திட்டம் 8 சென்னை - சித்தூர் வழி சாலை திட்டம். நிலஅளவைப் பணிகள் தொடங்கிவிட்டன. 

திட்டம் 9 ஓசூர் ரிங் ரோடு சாலை திட்டம். 

சமுக ஆர்வலரான பியூஷ் மானுஷ் தமிழக மக்கள் இந்தச் சாலை திட்டங்களினால் அரசுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர். மிக மோசமாகப் பொது மக்களின் இடங்களை அரசு வளைத்துப்போட்டு வருகிறது. கண்டிப்பாக இந்த நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் எடப்பாடி ஆட்சிக்கு எதிராகத் திரும்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் நாட்டில் வர இருக்கும் இந்தச் சாலை திட்டங்களுக்கு வேளாண் நிலங்களைக் கையகப்படுத்த குறைந்த விலையில் தான் பணத்தினை அளிக்கின்றனர். ஏற்கனவே உள்ள சாலைகளுக்காகக் கையகப்படுத்திய நிலங்களுக்கே உரிய பணத்தினை அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டும் உள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,845.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.