27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் சுற்றுலாப்பயணிகளாக காண வருகின்றனர். தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் காற்று மாசு ஏற்பட்டு தாஜ்மகாலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி விட்டது. தாஜ்மஹாலை உரியமுறையில் பாதுகாக்காமல் நடுவண் அரசு அலட்சியம் காட்டுவதாகவும், இதுகுறித்து நடுவண் அரசுக்கு உத்தரவிட வேண்டும், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தொல்பொருள் ஆய்வுத்துறை உள்ளிட்ட நடுவண் அரசின் பல்வேறு துறைகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்க பட்டபோதிலும் அவற்றை செயல்படுத்தவில்லை. தாஜ் காரிடார் என்ற பெயரில் அந்த பகுதியில் தொழிற்சாலைகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்தியாவில் தாஜ்மஹால் தனித்துவம் மிக்கது. தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டும் இழப்பல்ல. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இழப்புதான். தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நடுவண் அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் தாஜ்மஹால் பாதுகாப்பில் உரிய அக்கறையின்றி நடுவண் அரசு செயல்படுகிறது. அதுபோலவே தாஜ்மகாலை பாதுகாக்க நீண்டகால அடிப்படையில் திட்டத்தை உத்தர பிரதேச அரசு தயாரிக்கவில்லை என அறங்கூற்றுவர்கள் தெரிவித்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,845.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.