Show all

சிறப்பு! பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு இல்லை

பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு இல்லை என எடியூரப்பா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நூறைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதனால், கே.ஆர்.சந்தை, கலாசிபாளையம் உள்ளிட்ட சந்தைகள் மூடப்பட்டுள்ளன. தர்மராயசாமி கோவில், சாம்ராஜ்பேட்டை, சிக்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மூடல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கொரோனா பரவலைத் தடுக்க பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், நேற்று எடியூரப்பா தலைமையில் விதான் சவுதாவில் கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெங்களூருவில் எக்காரணம் கொண்டும் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“பெங்களூருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானால், 6 முதல் 7 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர கூடுதலாக 100 சடுதிவண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ கல்லூரிகளில் 10 ஆயிரம் படுக்கைகள் இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளன.

அந்தக் கல்லூரிகளுடன் பேசி, அதில் 5,000 படுக்கைகளை அரசு தன்வசம் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். சில மருத்துவ கல்லூரிகள் படுக்கைகளை வழங்கிவிட்டன. கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 61 விழுக்காட்டு பேர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகத்தில் தற்போது 3,700 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெங்களூருவில் 6 பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அந்தப் பகுதிகளை மட்டும் முடக்கியுள்ளோம். பெங்களூருவில் எக்காரணம் கொண்டும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை.” இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

கர்நாடகத்திற்கு வெளிமாநில, வெளிநாட்டுத் தொடர்புகள் குறைவாக இருப்பதே அங்கு கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதற்கும் விரைவில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் காரணம் என்று தெரிவிக்கிறார்கள். மேலும் பல ஆண்டு காலமாக கர்நாடகாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாநில உணர்வுகளே இதற்குக் காரணம் என்கின்றனர் கன்னட ஆர்வலர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.