Show all

சோனியா வருத்தம்! தேனொழுகப் பேசும் மோடியின் வெட்டிப் பேச்சு ஏழைகளின் வயிற்றை நிரப்பி விடாது

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி நடிகரைப் போல நன்றாக உடலசைவு மொழிகளோடு உரக்கப் பேசப் பழகியிருக்கிறார். அவ்வாறு பேசுவதாலேயே ஏழைகளின் வயிறு நிரம்பி விடாது; கொஞ்சமாவது மக்கள் நலனுக்கான செயலும் வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கூறினார்.

கர்நாடகாவில் சனியன்று தேர்தல் நடைபெறுவதால் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் கருத்துப் பரப்புதலைச் சமாளிக்கும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி நேற்று கருத்துப்பரப்பதலில் ஈடுபட்டார். 2 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதால், அவரைக் காண கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பீஜாப்பூரில் குவிந்தனர்.

கடந்த தேர்தலின்போது முன் வைத்த அனைத்து வாக்குறுதிகளையும் சித்தராமையா நிறைவேற்றியுள்ளார். கூட்டுறவு வங்கியில் இருந்த உழவர்களின் அனைத்து கடனையும் ரத்து செய்துள்ளார். வறட்சியால் கஷ்டப்படும் உழவர்களுக்கு நிதி வழங்கக் கோரியும், தேசிய வங்கிகளில் உள்ள கடனை ரத்து செய்யக் கோரியும் கர்நாடக அரசு நடுவண் அரசை தொடர்ந்து கோரி வந்தது. ஆனால் மோடி கர்நாடக உழவர்களின் பிரச்சினைக்கு செவிசாய்க்கவில்லை. இதன் மூலம் ஒட்டுமொத்த கர்நாடகாவையே அவமதித்து விட்டார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற அடிப்படைத் தேவைப் பொருட்களின் விலை விண்ணை தொட்டிருக்கிறது. இதுவரை இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு விலைவாசி உயர்ந்ததில்லை. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதும் மோடி அரசு ஏராளமான வரிகளை விதித்து மக்களை வதைத்து வருகிறது. இந்த விலைவாசி உயர்வால் ஏழை எளியோரும், பெண்களும், நடுத்தர வர்க்கத்தினரும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால் நரேந்திர மோடி நடிகரைப் போல நன்றாக உடலசைவு மொழிகளோடு உரக்கப் பேசப் பழகியிருக்கிறார். அவ்வாறு பேசுவதாலேயே ஏழைகளின் வயிறு நிரம்பி விடாது; கொஞ்சமாவது மக்கள் நலனுக்கான செயலும் வேண்டும் நடிகரைப் போல பாவனை காட்டி பேசும் அவரின் இந்த பேச்சால் பசியில் துடிக்கும் ஏழைகளின் வயிறு நிரம்பி விடாது. பேசியதை செயல்படுத்தாமல் வெளிநாடுகளுக்கு போய்க் கொண்டிருக்கிறார். போகிற இடங்களில் எல்லாம் வரலாறை திரித்து, பொய்யை விதைத்து வருகிறார். தேசப்பற்றையும், வரலாற்று தலைவர்களையும் தனது சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார்.

மோடி, சிறைக்கு போன எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருப்பது ஏன்? கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் ஏழைகளுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும், தலித்துகளுக்கும் மோடி என்ன செய்தார்? வளர்ச்சி, குஜராத் மாதிரி, மோடி அலை எதுவும் பசவண்ணர் பிறந்த கர்நாடகாவில் எடுபடாது. வருகிற தேர்தலில் மோடிக்கு தக்க பாடம் கற்பித்து, கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,782.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.