26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் விரேந்தர் மோகன் மற்றும் அவரது மகன் நிதின் மோகன் ஆகிய இருவரும் மோட்டார் மெக்கானிக்குகளாக உள்ளனர். வசதிபடைத்த ஆட்களிடம் சென்று நட்பை ஏற்படுத்திக்கொண்டு, தங்களிடம் அதிக விலை மதிப்பு கொண்ட செம்புத் தகடு இருப்பதாகவும், அமெரிக்க விண்வெளி மையமான நாசாவில் அதற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், அதிக விலைக்கு தகடை வாங்க நாசா தயாராக உள்ளது. எனவே, எங்களிடம் உள்ள தகடை வாங்கி நாசாவுக்கு விற்க உங்களுக்கு தெரிந்த ஆட்கள் யாராவது இருக்கிறார்களா? என கேட்பது வழக்கம். இவர்களது பொய்யை மற்றவர்கள் நம்ப, நாசாவுக்கு விண்வெளி உடைகள், வேதியல் பொருட்கள் தாங்கள் தயாரித்து அனுப்புவதாக கூறி போலியான ஒரு விண்வெளி உடையை காட்டுவர். இந்நிலையில், அவர்களது பொய்யை நம்பி தொழிலதிபர் ஒருவர் ரூ1,43,00,000 பணத்தை இழந்துள்ளார். செம்புத் தகடு தனிப்பட்ட பல இயற்பியல் தன்மைகளை கொண்டுள்ளதால், நாசாவில் மட்டுமே அது பயன்படும் என அவர்கள் கூறி, தொழிலதிபர் நம்ப வேண்டும் என்பதால், அரிசியை அந்த தகடு ஈர்ப்பது போல சில வித்தைகளைக் காண்பித்து எளிதாக அவரை மயக்கி விட்டனர். மோசடிப் பேர்வழிகளின் வித்தைகளில் மயங்கிய தொழிலதிபர் பல்வேறு கட்டமாக ரூ.1.43 கோடிபணத்தை கொடுத்துள்ளார். கடைசியில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அவர் காவல்துறையில் சென்று புகாரளிக்கவே, தற்போது தந்தை - மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாமெல்லாம், நம் வங்கி கணக்கிற்கு 15இலட்சம் வரும் என்று நம்பி அரசியல்வாதிகளிடம் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செய்வதறியாது திண்டாடிக் கொண்டிருப்பவர்கள் தானே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,782.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.