வினையான வேளாண் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான வழிகளை ஆராயுமாறு, ஒன்றிய பாஜக அரசை கேட்டு கொண்டுள்ள உச்சஅறங்கூற்றுமன்றம்- எதிர்வினையான உழவர்களின் போராட்டத்தை ஒழுங்கு படுத்த முழுமையான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: வேளாண் சட்டத்தைநிறுத்தி வைப்பதற்கான வழிகளை ஆராயுமாறு, ஒன்றிய பாஜக அரசை உச்சஅறங்கூற்றுமன்றம் கேட்டு கொண்டுள்ளது. அதே நேரத்தில் உச்சஅறங்கூற்று மன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் தெரிவித்து விட்டது. குறிப்பிட்ட சில கார்ப்ரேட்டுகளின் நலனுக்கானதே இந்தச் சட்டங்கள் என்று குற்றஞ்சாட்டி, ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள, 3வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில வேளாண் பெருமக்கள் டில்லியில், இன்று 21வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அந்தப் போராட்டத்தை முறியடிக்கும் முயற்சியாக ஒன்றிய பாஜக அரசு, ஆங்காங்கே தடுப்புக்களையும், தடைகளையும் அமைத்துள்ளது. இதனால் டில்லியில் போக்குவரத்து பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. போராட்டம் நடத்தும் உழவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க வேண்டி தனியாட்கள் சிலர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை அறங்கூற்றுவர் பாப்டே தலைமையில், அறங்கூற்றுவர்கள் போபண்ணா, இராமசுப்பரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நடந்தது. இந்த வழக்கில் அறங்கூற்றுவர்கள் கூறியதாவது: வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. உழவர்களின் போராட்டம் தொடர்பாக மட்டும் விசாரித்து சில முடிவெடுக்கப்படும். சட்டம் குறித்த கேள்விகள் காத்திருக்கட்டும். சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்பதை நாங்கள் ஒப்பு கொள்கிறோம். அதில், எந்த கேள்வியும் எழுவில்லை. அந்த போராட்டம், மற்றொருவரின் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது. உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு உரிமை உள்ளது. அதில், நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், போராட்டம் நடத்தும் விதம் குறித்து கவனிக்க வேண்டியுள்ளது. என்ன மாதிரியான போராட்டம் நடந்து வருகிறது, பொது மக்களின் நடமாட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாற்றம் ஏற்படுத்த முடியுமா என ஒன்றிய அரசை கேட்க விரும்புகிறோம். பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் அல்லது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாதவரை. ஒரு போராட்டம், அரசியல் அமைப்பின்படி செல்லுபடியாகும். பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான குழு அமைப்பது குறித்து சிந்தித்து வருகிறோம். இந்த குழுவானது. எதை பின்பற்ற வேண்டும் என்பதை ஆராய்ந்து முடிவு சொல்லட்டும். அதேநேரத்தில் போராட்டமும் தொடரலாம். சுதந்திரமான குழுவில் பாரதிய கிஷான் சங்கத்தின் பி சாய்நாத் இடம்பெறட்டும். உழவர்கள் வன்முறையைத் தூண்டக்கூடாது. நகருக்கு செல்லும் வழிகளை மறிக்கக்கூடாது. டில்லிக்கு செல்லும் வழிகளை மறிப்பதால், டில்லியில் உள்ள மக்கள் பசியில் வாடுவார்கள். உங்களின் சிக்கல்களை கலந்துரையாடல் மூலம் தீர்த்து கொள்ள முடியும். பொது வெளியில் அமர்ந்து உள்ளதால் மட்டும் தீராது. நாங்களும் இந்தியர்கள் தான். உங்களின்நிலை எங்களுக்கு தெரியும். உங்களின் சிக்கல்களுக்காக கவலை கொண்டுள்ளோம். நீங்கள் போராட்டம் நடத்தும் முறையை மாற்ற வேண்டும். உங்கள் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதற்காக தான் குழு அமைக்க யோசிக்கிறோம். வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான வழிகளை ஒன்றிய அரசு ஆராய வேண்டும். இந்தப் பாட்டில், அறங்கூற்றுமன்றம் முடிவெடுக்கும் வரை, இந்த புதிய வேளாண் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல மாட்டோம் என ஒன்றிய அரசு உறுதியளிக்குமா என அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்பினர் . அனால் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒருவரும் முகமூடி அணியவில்லை. அருகருகே அமர்ந்துள்ளனர். கொரோனா பரவல் உள்ள நிலையில், இது கவலைக்குரியது. கிராமங்களுக்கு செல்லும் அவர்கள். அதனை பரப்பக்கூடும். மற்றவர்களின் அடிப்படை உரிமையை உழவர்கள் பறிக்கக்கூடாது என்றெல்லாம் பேசினார். இந்த புதிய வேளாண் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல மாட்டோம் என ஒன்றிய அரசு உறுதியளிக்குமா என அறங்கூற்றுவர் அட்டர்னி ஜெனரலிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தரவில்லை. விசாரணைக்கு பின், இந்த வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



