Show all

நீட் தேர்வு கட்டாயம் இரத்து செய்யப்படவேண்டும்! நீங்கள் 12-ம் வகுப்புத் தேர்வுகளை இரத்து செய்ததற்கான அதேகாரணங்கள் நீட்டுக்கும் பொருந்தும்

நீங்கள் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ததற்கான அதேகாரணங்கள் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் பொருந்தும். அதனால் அனைத்து நுழைவுத் தேர்வுகளும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றியத் தலைமைஅமைச்சருக்கு தமிழக முதல்வர் மடல் எழுதியுள்ளார்.

23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வை இரத்து செய்யவேண்டும். 12-ம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளின் சேர்க்கை நடைபெறும் என்று ஒன்றியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா குறுவித் (வைரஸ்) தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை நடத்தினால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இடைநிலை கல்விவாரியப் பாடத்திட்ட 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை இரத்து செய்வதாக ஒன்றியத் தலைமை அமைச்சர் மோடி அறிவித்தார். அவருடைய அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களும் 12-ம் வகுப்பு தேர்வை இரத்துசெய்வதாக அறிவித்தனர். அதேபோல, தமிழகத்திலும் 12-ம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. இருப்பினும், தமிழக அரசு 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவதற்கு ஆர்வம் காட்டியது.

12-ம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவத்துறையினர், கல்வியாளர்கள், அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தியது. பல்வேறு தரப்பினருடனான ஆலோசனைக்குப் பிறகு 12-ம் வகுப்பு தேர்வை இரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவருடைய அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். 

இந்தநிலையில், ஒன்றியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அந்த மடலில், ‘12-ம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான முதன்மைப்பாட்டில் நீங்கள் தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவில் தீவிர கொரோனா பரவல் காரணமாக இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்ட மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இரத்து செய்வது என்று நாங்களும் முடிவு செய்துள்ளோம். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்திலுள்ள கலை, அறிவியல், தொழிற்துறைப் படிப்புகளுக்கான சேர்க்கை அனுமதிக்கப்படும். மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மனதில்வைத்தும், பெரும்பாலான கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மருத்துவ வல்லுநர்கள் கருத்துகளைக் கருத்தில் கொண்டும் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய சூழலில் எந்தபடிப்புகளுக்கான ஒன்றிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது என்பதும் மாணவர்களின் உடல்நலத்திற்குப் பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அதனால், நீட் உள்ளிட்ட ஒன்றிய அளவிலான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

நீங்கள் ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரிய மாணவர்களின் 12-ம் வகுப்புத் தேர்வுகளை இரத்து செய்ததற்கான அதேகாரணங்கள் இதற்கும் பொருந்தும். 

நாங்கள் எப்போதும் வலியுறுத்திவருவதுபோல 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் ஒன்றின் அடிப்படையில் மட்டும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.